இப்படி பண்ணிட்டாங்களே.. எனது தோல்விக்கு காரணம் இதுதான்.. வேதனையில் ஜெகதீஷ் ஷெட்டர்
பெங்களூர்: காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் சூழலில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியடைந்தார். இந்த நிலையில் எனது தோல்விக்கான காரணம் என்ன என்று ஜெகதீஷ் ஷெட்டர் விளக்கமளித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில்முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜக தலைமை சீட் கொடுக்க மறுத்தது. இதனால் கோபம் அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் அவருக்கு விருப்பமான தொகுதியான உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியது. ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சொல்லி வரும் எடியூரப்பா, அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் வியூகங்களை வகுத்து செயல்பட்டார்.

இந்த நிலையில், நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் ஜெகதீஷ் ஷெட்டர் பின்னடைவை சந்திக்க தொடங்கினார். பாஜக சார்பில் களமிறங்கிய மகேஷ் தென்கின்காய் தொடர்ந்து முன்னிலை பெற்றார். இறுதியில் உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் பாஜகவின் மகேஷ் தென்கின்காய் வெற்றி பெற்றார்.
ஜெகதீஷ் ஷெட்டர் 34,289 ஓட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் ஜெகதீஷ் ஷெட்டர் 7 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இந்நிலையில் தான் அவர் தோல்வி அடைந்தது கர்நாடகாவில் பெரிதும் பேசப்பட்டது.

காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் சூழலில், அவர் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சரவையில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்து இருக்கும். ஆனால் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைந்தது அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில், உப்பள்ளியில் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "உப்பள்ளி மத்திய தொகுதியில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளேன். என்னை தோற்கடிக்க பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டனர். அதற்காக தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர்.
அந்த பண பலத்தால் பாஜக வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாஜக இந்த தேர்தலில் தோற்று விடும், காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெறும் என்பது முன்கூட்டியே தெரிந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை இலக்காக கொண்டு தோற்கடித்து விட்டார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications