மே 10ல் தேர்தல்.. கர்நாடகாவில் பணபட்டுவாடாவை தடுக்க புதுநடவடிக்கை! விதிமீறல் புகாரளிக்க சூப்பர் வசதி
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் பணப்பட்டுவாடாவை தடுக்க புது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விதிமீறல் புகார்களை பொதுமக்கள் அளிப்பது பற்றியும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கி உள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். அதன்படி மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மே மாதம் 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கையை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
224 சட்டசபை தொகுதிகள் உள்ள கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்மனுத்தாக்கல் ஏப்ரல் 15ம் தேதி துவங்க உள்ளது. ஏப்ரல் 20 வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஏப்ரல் 24ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அதன்பிறகு மே 10ல் தேர்தல் நடத்தி மே 13ல் முடிவுகள் வெளியாக உள்ளது.

நடத்தை விதிகள் அமல்
கர்நாடகா தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டதன் மூலம் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இந்நிலையில் தான் தேர்தலை அமைதியாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் தனிக்குழுக்களை அமைக்க உள்ளது.

2,400 கண்காணிப்பு குழுக்கள்
அதன்படி மொத்தம் 2,400 கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளன. மேலும் பிறமாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்குள் நுழைவதற்காக 19 மாவட்டங்களில் உள்ள வழிப்பாதைகளில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். இதன்மூலம் கர்நாடகா மாநிலத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து பணம், பரிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் நம்புகிறது.

சிவிஜில் மூலம் புகாரளிக்க முடியும்
மேலும் நியாயமான முறையில் முறைகேடு இன்றி தேர்தல் நடத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி பொதுமக்கள் முறைகேடு, பணம் விநியோகம் குறித்த விஷயங்களை நேரடியாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் (cVigil) செயலி மூலம் புகார்களை பதிவு செய்யலாம். இந்த புகார்கள் மீது 100 நிமிடங்களில் அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்ட நிர்வாகம், மாநில தேர்தல் அதிகாரி சார்பிலும் புகார் எண்கள் வழங்கப்பட உள்ளது.

5.21 கோடி வாக்காளர்கள்
கர்நாடகாவை பொறுத்தமட்டில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை கைப்பற்ற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் ஜேடிஎஸ், ஆம்ஆத்மி கட்சிகளும் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் களம் இறங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications