கடும் அமளிக்கு மத்தியில்... பசுவதை தடுப்பு மசோதா கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!
பெங்களூரு: கடும் அமளிக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
பசுவதை தடுப்பு சட்ட மசோதாவை கர்நாடக மாநில கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுகான் பேரவையில் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கே சென்று கூச்சல் எழுப்பினர்.

மேலும், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் இந்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாத கர்நாடக அரசு பசுவதை தடுப்பு மசோதாவை வெற்றிகரமாக பேரவையில் நிறைவேற்றியது.
இதனிடையே பசுவதை தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பும் செய்தனர். பசுவதை தடுப்புச் சட்டம் கர்நாடகாவில் நிறைவேற்றப்படும் என கடந்த சனிக்கிழமை அன்று அம்மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தெரிவித்த அடுத்த 5 வது நாளில் அதிரடியாக இந்த சட்டத்தை நிறைவேற்றிக் காட்டிவிட்டது கர்நாடக பாஜக அரசு. இனி அடுத்ததாக லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் இயற்றும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபடும் எனத் தெரிகிறது. ஏனெனில் இது குறித்தும் அஸ்வத் நாராயணன் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பசுவதை தடுப்பு சட்ட மசோதா குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இந்தச் சட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றஞ்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications