'நடந்தது போதும் அம்மா' காரில் வாங்க.. ராகுல் காட்டிய பாசம்.. நெகிழ்ந்த தொண்டர்கள்.. ஷூ லேஸ் வேற!
பெங்களூர்: கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் தாயாரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இன்று கலந்து கொண்டார். அப்போது நீங்கள் நடந்தது போதும் அம்மா என பாசத்தோடு ராகுல் காந்தி அம்மாவிடம் பேசியது தொண்டர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தனது பாத யாத்திரையை தொடங்கினார். மொத்தம் 150 நாட்களளில் 3,750 கி.மீட்டர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
கர்நாடகா: 2 நாட்கள் ஓய்வுக்கு பின் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடக்கம்- சோனியா காந்தியும் பங்கேற்பு!
கர்நாடகாவில் ராகுல் காந்தி
அதாவது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் பாத யாத்திரையாக செல்கிறார். 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து அவரது பாத யாத்திரை செல்ல உள்ளது. கேரள மாநிலத்தை கடந்து தற்போது கர்நாடகாவில் ராகுல் காந்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதாலும், பாஜக ஆளும் மாநிலம் என்பதாலும் ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை சற்று கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
சோனியா காந்தி நடைபயணம்
தசரா பண்டிகை காரணமாக 2 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு இன்று பாத யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினர். மாண்டியாவில் ராகுல் காந்தியின் இன்றைய பாத யாத்திரையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்தி பங்கேற்றார். உடல் நல பாதிப்புகளால் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று விட்டு வந்த சோனியா காந்தி, சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் அவ்வளவாக பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்
இதனால், ராகுல் காந்தியுடன் இணைந்து சோனியா காந்தி பாத யாத்திரையில் பங்கேற்றது அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நடந்து வந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் கோஷங்களை எழுப்பினர். சிறிது தூரம் நடந்து வந்த சோனியா காந்தி, நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டே விறுவிறுவென நடந்து கொண்டிருந்தார்.
இவ்வளவு தூரம் நடந்ததே போதும் அம்மா
அப்போது, தாயார் சோனியா காந்தியின் கையை பிடித்து நிறுத்திய ராகுல்... இவ்வளவு தூரம் நடந்து வந்ததே போதும் அம்மா... காரில் வாருங்கள் என்று வற்புறுத்தினார். சோனியா காந்தி தொடர்ந்து நடக்கவே ஆயத்தமாக இருந்தது போல தெரிந்தது. ஆனால், ராகுல் காந்தி விடாமல் காரில் வருமாறு அறிவுறுத்தினார். சோனியா காந்தியின் உடல் நலம் காரணமாக ராகுல் காந்தி அவரை நீண்ட தூரம் நடக்க விடாமல் காரில் வர அறிவுறுத்தினார். இதையடுத்து சோனியா காந்தி காரில் ஏறி சென்றார். அம்மாவின் மீதான ராகுல் காந்தியின் பாசத்தினை நேரில் பார்த்த அங்கிருந்த கட்சியினர் நெகிழ்ந்து போகினர்.
ஷூ லேஸ் கட்டி விட்ட ராகுல்
முன்னதாக, ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடைபயணம் மேற்கொண்டிருந்த சோனியா காந்தியின் காலில் அணிந்திருந்த ஷூ வின் லேஸ் அவிழ்ந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த ராகுல் காந்தி உடனடியாக அம்மா காலில் அணிந்திருந்த ஷூ லேசை தன் கையால் கட்டி விட்டார். இதுவும் அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.