5 ஏக்கர் நிலம்: மல்லிகார்ஜூன கார்கே குடும்பம் மீது லோக் ஆயுக்தாவில் 400 பக்க ஆவணத்துடன் பாஜக புகார்!
பெங்களூர்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ110 கோடி மதிப்பிலான 5 ஏக்கம் நிலம் ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடகா மாநில லோக் ஆயுக்தாவில் 400 பக்க ஆவணங்களுடன் பாஜக புகார் கொடுத்துள்ளது. முடா வழக்கில் சிக்கிய சித்தராமையா, தேர்தல் பத்திர வழக்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு ஆகியவற்றைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே குடும்பத்தினர் மீது புகார் கொடுத்திருப்பதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் முதல்வர் சித்தராமையா மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது.

இதேபோல தேர்தல் பத்திர முறைகேடு வழக்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பரபரப்புகளைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கர்நாடகா லோக் ஆயுக்தாவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த என்.ஆர்.ரமேஷ், 400 பக்க ஆவணங்களுடன் லோக் ஆயுக்தாவில் புகார் கொடுத்தார். அதில் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மகனும் கர்நாடகா அமைச்சருமான பிரியங்க் கார்கே, மற்றொரு மகன் ராகுல் கார்கே, மல்லிகார்ஜூன கார்கே மருமகனும் எம்பியுமான ராதாகிருஷ்ணா உள்ளிட்ட 7 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு மல்லிகார்ஜூன கார்கே குடும்பத்தின் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு கர்நாடகா அரசு ஏற்கனவேர் 5 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளது. தற்போது மீண்டும் 5 ஏக்கர் நிலத்தை கர்நாடகா அரசிடம் அந்த தொண்டு நிறுவனம் கேட்டிருந்தது. இந்த விண்ணப்பம் கொடுத்த 3 மாதத்தில் ரூ110 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை கார்கே குடும்பத்தின் தொண்டு நிறுவனத்துக்கு கர்நாடகா அரசு வழங்கிவிட்டது. தொழில் தொடங்கும் தொழில் முனைவோர் பலரும் அரசிடம் இருந்து நிலம் பெறுவதற்கு காத்திருக்கும் நிலையில் அமைச்சர் பிரியங்க் கார்கேவின் நெருக்கடியால் அவரது குடும்பத்தின் தொண்டு நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டது; ஆகையால் இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாஜக ரமேஷின் புகார். இதற்கான 400 பக்க ஆவண்மும் லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications