கர்நாடகா: அமலுக்கு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாளை முதல் போராட்டம் - பாஜக மிரட்டல்!
பெங்களூர்: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் கடும் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வை உடனே வாபஸ் பெறாவிட்டால் போராட்டங்கள் வெடிக்கும் என பிரதான எதிர்க்கட்சியான பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை திடீரென கடுமையாக உயர்த்தி அறிவித்தது. கர்நாடகாவில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 25.92% இருந்தது. இது தற்போது 29.84% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல டீசல் மீதான விற்பனை வரி 14.34% ஆக இருந்தது. இதுவும் 18.44% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் மீதான விற்பனை வரி 3.92%; டீசல் மீதான விற்பனை வரி 4.1% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை வரி உயர்வு உடனடியாகவும் அமலுக்கு வந்தது.

கர்நாடகா அரசின் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி உயர்வால், இம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3 உயர்ந்து ரூ102.84 ஆகவும் டீசல் விலை ரூ.3.50 உயர்ந்து 1 லிட்டர் டீசல் ரூ89.43 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரேயடியாக பெட்ரோல், டீசல் விலை ரூ3 முதல் ரூ3.50 வரை உயர்ந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளனர் பொதுமக்கள்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக கடுமையான நிதிச்சுமையை எதிர்கொண்டிருக்கிறது; இதனை சமாளிக்கவே பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தி இருக்கிறது.
கர்நாடகா காங்கிரஸ் அரசின் இந்த விலை உயர்வுக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநில அரசு உடனடியாக இந்த விலை உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் திங்கள்கிழமை முதல் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா எச்சரித்துள்ளார். பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனவாலா, காங்கிரஸின் உண்மை முகம் வெளியே வந்துவிட்டது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் கர்நாடகா அரசின் கஜானாவையே காலி செய்துவிட்டது காங்கிரஸ் அரசு எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications