அமைச்சர் பதவிதானே கேட்டீங்க.. "கண்ணை மூடி திறங்க.". எடியூரப்பா 'மாயாஜாலம்..' பரவசமான எம்எல்ஏக்கள்
பெங்களூர்: "அமைச்சர் பதவி வேண்டும் என்றுதானே லாபி செய்றீங்க.. இதோ நீங்கள் வகிக்கும் பதவிகளை அமைச்சர் பதவிகளாக மாற்றி விடுகிறேன் பாருங்கள்" என்று 'மாயாஜாலம்' செய்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற நாள் முதல், அவருக்கு பெரிய தலைவலியாக இருப்பது அமைச்சர் பதவியை யாருக்கெல்லாம் கொடுப்பது என்பதுதான்.
இந்த முறை மட்டுமல்ல.. அவர் இதற்கு முன்பு ஆட்சி செய்த காலகட்டத்தில் கூட அமைச்சர் பதவிகளுக்காகத்தான் ஆயிரம் அடிதடிகள்.. ரிசார்ட் அரசியல் எல்லாம் நடந்து பெரும் களேபரங்களை கர்நாடக அரசியல் பார்த்தது.
17 எம்எல்ஏக்கள்
இப்போது ஒருவழியாக மெஜாரிட்டிக்கும் அதிகமான அளவுக்கு எம்எல்ஏக்கள் பலத்தோடு ஆண்டு வருகிறார் எடியூரப்பா. ஆனாலும், அந்த அமைச்சர் பதவி பிரச்சினை மட்டும் தீர்ந்தபாடு கிடையாது. சுமார் 17 எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று லாபி செய்து வந்தனர். ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருப்பவர்களை நீக்கிவிட்டு சுழற்சிமுறையிலாவது கொடுங்கள் என்று தொடர்ந்து அவர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
அமைச்சர் பதவிக்கான தகுதி
இவர்களின் பஞ்சாயத்தை தீர்த்து வைக்கவே, நேரம் போதவில்லை எடியூரப்பாவுக்கு. இதில் அரசு பணிகளை எங்கே இருந்து பார்ப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தார் எடியூரப்பா. ஏனெனில், தகுதிநீக்க சட்டத்தின்கீழ் மொத்த எம்எல்ஏக்கள் பலத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக அமைச்சர் பதவியை வழங்கி விட முடியாது. 15 அல்லது அதற்கும் உள்ளேதான் அமைச்சர் பதவியைக் கொடுக்க முடியும்.
கண நேரத்தில் கப்பென்று ஒரு ஐடியா
சட்டம் இப்படி சொல்கிறது.. ஆனால் எம்எல்ஏக்கள் வேறுமாதிரி வலியுறுத்தி வருகிறார்களே.. என்று இரவு பகலாக யோசித்துக்கொண்டு இருந்த எடியூரப்பாவுக்கு கணநேரத்தில் ஒரு ஐடியா பளிச் சென்று தோன்றியது. அது என்ன ஐடியா தெரியுமா?
உட்கார்ந்த இடத்திலேயே அமைச்சர்
பல்வேறு வாரியங்கள் மற்றும் கழகங்களுக்கு தலைவராக உள்ள 13 பாஜக எம்எல்ஏக்களுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், இதேபோல பதவி வகித்த நான்கு எம்எல்ஏக்களுக்கு இணை அமைச்சர் பதவியிலான அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டுள்ளார். வாரியம் மற்றும் கழகங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் அளவிலான அந்தஸ்து வழங்குவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. அதை எடியூரப்பா பயன்படுத்தியுள்ளார்.
அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்து
அமைச்சர்களுக்கு எவ்வாறு சலுகைகள் தரப்படுகிறதோ அதே அளவுக்கான சலுகைகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை இவர்களுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களும், அமைச்சர் பதவிக்கான ஆசையை தணித்துக் கொண்டதாக ஆயிற்று என்பது எடியூரப்பாவின் மாயாஜால திட்டம்.
எடியூரப்பாவின் மாயாஜாலம்
ஆக மொத்தம் 17 எம்எல்ஏக்களின் அமைச்சர் ஆசையை குறைத்து விட்டார் எடியூரப்பா. அதேநேரம் அமைச்சராக வலம் வந்தால் மக்களின் நன்மதிப்பை "சம்பாதிக்க" முடியும். இதில் அது மட்டும் மிஸ்ஸிங் என்பதால், ஏதோ ஓரளவுக்கு இப்போதைக்கு சமாதானம் ஆகி உள்ளனர் 17 பேரும். இப்போதைக்கு பிரச்சினையை தீர்த்து சந்தோஷம் எடியூரப்பா முகத்தில் நன்கு தெரிகிறது.