"கன்னடம் தெரியுமா?" ஜனாதிபதியிடம் கர்நாடக முதல்வர் கேட்ட கேள்வி! அதற்கு அவர் கொடுத்த பதில் இருக்கே! டிரெண்டிங்
பெங்களூர்: நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பங்கேற்ற நிலையில், அவர் குடியரசுத் தலைவரை பார்த்து உங்களுக்குக் கன்னடம் தெரியுமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்குக் குடியரசுத் தலைவரும் பதிலளித்த நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அகில இந்தியப் பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தின் வைர விழா கொண்டாட்டம் கர்நாடகா மாநிலம் மைசூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் குடியரசுத் தலைவர் முர்மு கர்நாடகா சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மைசூர் சென்ற அவரை விமான நிலையத்திலேயே கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் வரவேற்றனர்.

மைசூர் நிகழ்ச்சி
பிறகு அகில இந்தியப் பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தின் விழாவில் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர், கர்நாடக முதல்வர் ஆகியோரோடு மத்தியச் சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுபிரியா படேல், கர்நாடகச் சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் மைசூர் வம்சத்தின் இளவரசரான பாஜக எம்பி யதுவீர் வாடியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த நிகழ்வின் போது ஒரு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இடையே ஒரு சுவாரசியமான உரையாடல் நிகழ்ந்தது. அதாவது திரௌபதி முர்முவை பார்த்து "உங்களுக்குக் கன்னடம் தெரியுமா?" என்று சித்தராமையா கேட்டார். அதற்குத் தனக்குக் கன்னடம் தெரியாது என்று சொன்ன ஜனாதிபதி முர்மு, ஆனால் சீக்கிரமே கன்னடத்தை கற்றுக் கொள்வதாகக் கூறினார். இது இணையத்தில் டிரெண்டானது.
கன்னடம் தெரியுமா?
இந்த நிகழ்ச்சியின் வரவேற்புரையைக் கன்னடத்தில் வாசித்த முதல்வர் சித்தராமையா, திடீரெனக் குடியரசுத் தலைவரைப் பார்த்து புன்னகையுடன் "உங்களுக்கு கன்னடம் தெரியுமா?" என்று கேட்டார். இதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "கன்னடம் என் தாய்மொழி இல்லை என்றாலும் எனது நாட்டின் அனைத்து மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை நான் மதிக்கிறேன். இவை ஒவ்வொன்றின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு.
அனைவரும் தங்கள் மொழியை வாழ வைத்து, தங்கள் மரபுகளையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நிச்சயமாக நான் கொஞ்சம் கொஞ்சமாகக் கன்னடம் கற்றுக்கொள்ள முயல்வேன்" என்று கூறினார்.
டிரெண்டிங்
கர்நாடக முதல்வரின் இந்தக் கேள்வியும் அதற்குக் குடியரசு தலைவர் முர்மு அளித்த பதில் தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் கன்னட மொழியைக் காக்க வேண்டும் குரல்கள் அதிகாரிக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கர்நாடகாவில் வாழும் அனைவரும் கன்னடம் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குறிப்பிட்டிருந்தார்.
சித்தராமையா
அவர் அப்போது பேசுகையில், "நாம் அனைவரும் கன்னடர்கள். வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் இங்குக் குடியேறியுள்ளனர்.. இந்த மாநிலத்தில் வாழும் அனைவரும் கன்னடம் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், அப்போது எதிர்க்கட்சியினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications