கர்நாடகா: இடஒதுக்கீடு 75% ஆக உயர்த்தப்படும், மாநில கல்வி கொள்கை..காங். தேர்தல் அறிக்கையில் அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் தற்போதைய இடஒதுக்கீடு அளவு 75% ஆக உயர்த்தப்படும் என்றும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி தொடர்பாக கர்நாடகா காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:
- கர்நாடகவில் தகுதி வாய்ந்த ஜாதிகளுக்கான இடஒதுக்கீடு 75% ஆக உயர்த்தப்படும்
- எஸ்சி இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆக உயர்த்துவோம்
- எஸ்டி இடஒதுக்கீடு 3%-ல் இருந்து 7% ஆக உயர்த்துவோம்
- சிறுபான்மையினர் இடஒதுக்கீடு 4% மீண்டும் அமல்படுத்துவோம்
- லிங்காயத், ஒக்கலிகா இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு 9-வது அட்டவணையில் சேர்ப்போம்.
- கர்நாடகாவில் ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும்
- மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை நிராகரிக்கப்படும்.
- கர்நாடகா மாநில அரசுக்கென தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும்.

பின்னணி: கர்நாடகாவும் தமிழ்நாட்டைப் போல இடஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் உணர்வுப்பூர்மானது. கர்நாடகாவில் லிங்காயத்துகள் 16%-17% ; ஒக்கலிகா கவுடாக்கள் 12-14% உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் 60% பேர் உள்ளனர். வட, மத்திய கர்நாடகாவில் லிங்காயத்துகள் பெரும்பான்மையினர். கடலோர கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள் அதிகம். தென் கர்நாடகாவில் ஒக்கலிகா கவுடாக்கள் பெரும்பான்மையினர்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர், முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு பறித்தது. இதனை லிங்காயத், ஒக்கலிகா ஜாதிகளுக்கு சம பங்காக பகிர்ந்தளித்தது. இது கர்நாடகா தேர்தல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக ஏற்கனவே எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அதிகரித்தது. ஆனால் இது உச்சநீதிமன்றம் வரையறைத்த 50% இடஒதுக்கீட்டை மீறியதாக இருந்தது. இன்னொரு பக்கம் இதர பிற்படுத்தப்பட்டோரும் கூடுதல் இடஒதுக்கீடு கோரினர். இவை மட்டுமின்றி உள் இடஒதுக்கீடு விவகாரங்களும் கர்நாடகா அரசியலில் பெரும் தலையிடியாக உள்ளன. இந்த பின்னணியில்தான் தற்போது இடஒதுக்கீடு அளவை 75% ஆக உயர்த்துவோம் என வாக்குறுதி தந்துள்ளது.
தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற வரையறையை மீறி 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் 69% இடஒதுக்கீடு சட்டப்படியானதும் கேள்விக்குள்ளாக்கப்படாத ஒன்றாகவும் உள்ளது. இதே பார்முலாவைத்தான் கர்நாடகாவில் பின்பற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கொடுத்துள்ளது காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications