6 நாள் சம்பளத்துடன் பீரியட்ஸ் லீவ்.. அரசு - தனியார் நிறுவனங்களில் விரைவில் அமல்! அசத்தும் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆண்டுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் கூடிய பீரியட்ஸ் லீவ் வழங்கும் நடைமுறையை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில் பீரியட்ஸ் விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவிலும் அந்த மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில தலைவர் டிகே சிவக்குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.

கடந்த ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில் பெண்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்டத்தை கர்நாடகா காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் அடுத்த நடவடிக்கையாக கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பீரியட்ஸ் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான பரிந்துரைகளை வழங்க 18 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி ஆய்வு மேற்கொண்டு தற்போது கர்நாடகா அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த கமிட்டி என்பது 'The Right of Women to Menstrual Leave and Free Access to Menstrual Health Products' என்ற பெயரில் பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையாக வழங்கி உள்ளது. அதில் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த மசோதா கொண்டு வந்து சட்டமாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சம்பளத்துடன் கூடிய பீரியட்ஸ் விடுமுறை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போது பீகார், கேரளா, ஒடிசா மாநிலங்களில் பீரியட்ஸ் விடுப்பு வழங்கும் நடைமுறை உள்ளது. தற்போதைய பரிந்துரை செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் பீகார், கேரளா, ஒடிசா மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகாவும் இணையும். இந்நிலையில் தான் கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கையை பெண்கள் வரவேற்றுள்ளனர்.
இதுபற்றி கர்நாடகா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், ‛‛18 பேர் கொண்ட குழு சமர்ப்பித்த பரிந்துரைகைள மதிப்பீடு செய்து வருகிறோம். இதுதொடர்பாக பரிந்துரை அளித்த குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்
பெண்கள் தங்களின் வாழ்நாளில் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக திருமணமான பிறகு பணி ஒருபுறம், குழந்தைகளை கவனிப்பது மற்றொரு புறம் என சவால்களை சந்திக்கின்றனர். இதனால் பெண் பணியாளர்களை ஆதரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. உண்மையில் இந்த விடுமுறை என்பது பெண்களுக்கு மகிழ்ச்சியை தரும். இந்த விடுமுறையை அவர்கள் தங்களுக்கு தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் ''என்றார்.












Click it and Unblock the Notifications