காங்கிரஸ் தலைவர் பதவி.. டிகே சிவக்குமார் அடம்! முதல்வர் பதவிக்கு ஸ்கெட்ச்.. கர்நாடக அரசியலில் பரபர
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு கொடுக்க டிகே சிவக்குமார் மறுப்பு தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. முதல்வர் பதவி கிடைத்தால் மட்டுமே கட்சி தலைவர் பதவியை விட்டு கொடுக்க முடியும் என்று டிகே சிவக்குமார் திட்டவட்டமாக கூறியதாகவும், டெல்லி தலைமை தற்காலிகமாக அவரது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் கட்சி வட்டரங்கள் கூறுகின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக டிகே சிவக்குமார் உள்ளார். கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டிகே சிவக்குமாருக்கும், சித்தராமையாவுக்கும் முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது.

இரண்டரை ஆண்டுகள் முடிகிறது
இதையடுத்து முதல்வர் பதவியை சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு ஆளுக்கு 2½ ஆண்டுகள் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, சித்தராமையா முதல்வராக பதவியேற்று வரும் நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் முடிவடைய உள்ளது.
அதனால் ஆட்சி தலைமையில் மாற்றம் நிகழ்வது குறித்து ஏற்கனவே காங்கிரசில் தலைவர்கள், அமைச்சர்கள் கருத்து கூறுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. சித்தராமையா ஆதரவாளர்கள், அவரே முதல்வர் பதவியில் நீடிப்பார் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் டி.கே.சிவக்குமார் பதவியேற்பார் என்றும் பேசி வருகிறாா்கள். இவ்வாறாக கர்நாடாகவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஒரு பதவி தான்
இதற்கிடையே, கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவராக 5 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டிகே சிவக்குமார் அப்பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்ற ஒரு பேச்சு அடிபட்டது. இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. அதன்படி கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து டி.கே.சிவக்குமாரை விடுவிக்க வேண்டும் என்ற அவருக்கு எதிரானவர்கள் பேசி வந்தனர்.
ஆனால், முதல்வர் பதவி கிடைத்தாலன்றி, தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று டிகே சிவக்குமார் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் மேலிடமும் டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக முடிவு எடுத்துவிட்டதாக தெரிகிறது. வருகிற டிசம்பா் மாதம் வரை கட்சியின் மாநில தலைவராக டி.கே.சிவக்குமாரே நீடிப்பார் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டெல்லி சென்ற சிவக்குமார்
டெல்லிக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற டிகே சிவக்குமார் கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும், முதல்வர் பதவிக்கு உறுதியளித்தால் மட்டுமே தலைவர் பதவியை விட்டு கொடுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தால் மட்டுமே முதல்வர் பதவியை கேட்டுப்பெறுவதற்கு வசதியாக இருக்கும் என டிகே சிவக்குமார் கருதுவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. கர்நாடகாவில் டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்துவதும், அவருக்கு பதவி கொடுக்க கூடாது என சித்தராமையா கோஷ்டியினர் தொடர்ந்து பேசி வருவதும் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications