சோனியா காந்தி நீங்களே இப்படி பண்ணலாமா? உங்க கிட்ட இதை எதிர்பார்க்கல.. கர்நாடகாவில் கடுகடுத்த ஓவைசி
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சோனியா காந்தி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாகவும் சோனியா பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஒய்கிறது. தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் கர்நாடக தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆளும் பாஜக எப்படியும் இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், பல இலவச திட்டங்கள் அடங்கிய கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதியையும் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் இழந்த ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஜேடிஎஸ் கட்சியும் கணிசமான இடங்களில் வென்று கிங் மேக்கர் ஆகும் திட்டத்துடன் தேர்தல் களத்தில் உள்ளது.
தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் பாஜக, காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா திவீர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவி சோனியா காந்தி நேற்று கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பாஜகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக தர்வார் - உப்பள்ளி மத்திய தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சோனியா காந்தி, ஜெகதீஷ் ஷெட்டரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக பேசலமா? என சோனியா காந்தியை அசாதுதின் ஒவைசி விமர்சித்துள்ளார். உப்பள்ளியில் பிரசாரம் மேற்கொண்ட ஐதரபாத் எம்.பி ஓவைசி பேசுகையில், " ஆர்.எஸ்.எஸ்காரருக்கு நீங்கள் பிரசாரம் செய்துள்ளீர்கள். உங்களிடம் (சோனியா காந்தி) இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை.
துரதிருஷ்டவசமாக சித்தாதந்த யுத்தத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது. இதுதான் மதச்சார்பின்மைக்கு எதிரான உங்கள் போரா? பிரதமர் மோடிக்கு எதிராக நீங்கள் இப்படித்தான் செயல்படுவீர்களா?" என்றார். மேலும் பாஜகவின் பி டீம் என்று விமர்சனம் முன்வைக்கப்படுவது குறித்து பேசிய ஓவைசி, " அவர்களின் ஜோக்கர்கள், அடிமைகள், வேலை ஆட்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எங்களுக்கு எதிராக வைப்பார்கள்" என்றார்.
பாஜக சீட் கொடுக்க மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகி போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று பாஜக வியூகம் வகுத்து வருகிறது. பாஜக சார்பில் உப்பள்ளி தர்வார் மத்திய தொகுதியில் மகேஷ் தென்கின்கை போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பது இரு கட்சிகளுக்குமே கவுரவ பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால், கர்நாடக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ள சில முக்கியமான தொகுதிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications