அதிகரிக்கும் கொரோனா.. கியூவெல்லாம் எதுக்கு.. அதுதான் இருக்கே ஆன்லைன் சரக்கு.. கர்நாடகாவில் விரைவில்!
பெங்களூரு: கர்நாடாவில் முதன் முறையாக பெங்களூருவில் ஆன் லைன் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்வது குறித்து அந்த மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பெங்களூருவில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்த பின்னர் மாநிலத்தின் பிற பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் புறநகரங்களில் அமைந்து இருக்கும் மைசூர் சேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் வழங்க திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்த கருத்துக்களை கடிதம் மூலம் தெரிவிக்குமாறு பங்குதாரர்களுக்கு மாநில கலால் வரி கமிஷனர் எம். லோகேஷ் தலைமையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் பதில் கிடைத்துவிட்டால், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆன் லைனில் மதுபானங்கள் வழங்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே ஆன் லைனில் கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மதுபானங்கள் வழங்கி வருகின்றன. தற்போது கர்நாடகாவும் இந்தப் பட்டியலில் சேரவிருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கர்நாடகாவில் இருக்கும் ரெஸ்டாரன்ட், பார்கள், கிளப்புகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நேற்றைய அறிவிப்பிலும், இவற்றை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆன் லைனில் மதுபானங்கள் விற்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழக அரசின் சிக்கலான வழக்குகளில் ஆஜராக சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல். சோமையாஜி நியமனம்
ரெஸ்டாரன்ட், பார்கள், கிளப்புகள் தொடர்ந்து மூடப்பட்டு வர்த்தகம் நடைபெறாமல் இருப்பதால், நஷ்டம் ஏற்படுவதாகவும் விரைவில் இவற்றை திறப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு இதன் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆன் லைனில் மதுபானங்கள் விற்பனை செய்வதால், ரெஸ்டாரன்ட், பார்கள், கிளப்புகள் ஆகியவை வருமானத்தை இழந்து நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். இதுபோன்று ஆன் லைன் மதுபானங்களை திறப்பதன் மூலம் விபத்துக்களும் குறையும் என்று கலால் வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் மற்ற வருமானம் குறைந்து இருக்கும் நிலையில் மதுபான விற்பனை மூலம் வருவாய் ஈட்ட மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.