ஹேய்.. மது போதையில் அமளி செய்த பயணி.. ஒரே அடி.. எட்டி உதைத்து தள்ளிய நடத்துனர்.. பரபர வீடியோ
பெங்களூர்: கர்நாடகாவில் மது போதையில் இருந்த பயணியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொதுவாக, பேருந்து பயணிகளிடம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாக சமீபகாலமாக அதிக அளவில் புகார்கள் வருகின்றன. அந்த மாநிலம் இந்த மாநிலம் என எந்த வித்தியாசமும் இல்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் மீதி சில்லறையை கேட்ட பயணியை நடத்துனர் தாக்கியது; ஹரியாணாவில் காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்த தலித் வகுப்பைச் சேர்ந்த இளைஞரை ஓட்டுநர் அடித்து உதைத்தது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக மாறி வருகின்றன.
விடாத கர்நாடகா.. விநாயகர் சதுர்த்தி பந்தல்களில் சாவர்க்கர் படம்.. பெங்களூரில் கிளம்பும் சர்ச்சை
கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் கூட சில பகுதிகளில் இதுபோல பயணிகளை நடத்துனர்கள் அடித்து உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கவே, பயணிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என தமிழகம் உட்பட பிற மாநில அரசுகளும் போக்குவரத்து ஊழியர்களை அறிவுறுத்தி இருந்தன. இந்த சூழலில், கர்நாடகாவில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மது போதையில் ஏறிய நபர்
கர்நாடகா மாநிலம் தக்ஷன் கன்னடா மாவட்டம் சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களம் பகுதியில் நேற்று ஒரு அரசு பேருந்து அங்குள்ள நிறுத்தத்தில் நின்றது. அப்போது ஒரு பயணி பேருந்தில் ஏறினார். ஆனால் அவர் மது அருந்தி இருப்பதாக கூறப்பட்டது. இதனை அறிந்த நடத்துநர், அந்தப் பயணியை பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறினார். ஆனால் அவர் இறங்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எட்டி உதைத்த நடத்துனர்
இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நடத்துனர், அந்த நபரை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். பின்னர் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த அந்த நபரை காலால் மார்பில் எட்டி உதைத்தார். இதில் அந்த நபர் பேருந்தில் இருந்து அப்படியே கீழே விழுந்தார். பின்னர் அந்த நபருக்கு என்ன ஆனது என்று கூட கவலைப்படாமல் நடத்துனர், விசில் அடித்து பேருந்தை போகச் செய்தார். ஆனால் கீழே விழுந்த நபர் சில நிமிடங்கள் அப்படியே சாலையில் படுத்துக் கிடந்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை எழுப்பி சாலையோரம் அழைத்து வந்து அமர வைத்தனர். பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாய்ந்தது ஆக்சன்
இந்நிலையில், அந்த நபரை பேருந்து நடத்துநர் அடித்து உதைத்து கீழே தள்ளிவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயிரக்கணக்கானோர் வலியறுத்தினர். அதே சமயத்தில், மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறினால் மற்ற பயணிகளுக்கு பிரச்சினை ஏற்படும் என்றும், நடத்துனர் செய்தது சரிதான் எனவும் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அந்த நபர் மது அருந்தி இருந்தாலும் அவரை கையை பிடித்து கீழே இறக்கி விட்டிருக்க வேண்டும். எட்டி உதைக்க யார் அதிகாரம் தந்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பினர்.
இந்த விஷயம் பெரிதாகவே, சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனரை கர்நாடகா மாநில போக்குவரத்துக் கழகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.