பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில்.. 18+ வயதுடையவர்களுக்கு மே 1-ல் தடுப்பூசி கிடையாதாம்.. காரணம் இதுதான்!
பெங்களுரு: கர்நாடகா மாநிலத்தில் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்காது என்று மாநில அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் சென்று வரும் நிலையில் தென் மாநிலமான கர்நாடகாவில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் 39,047 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு தொற்று தினசரி பாதிப்பில் உச்சம் தொட்டுள்ளது.

பெங்களுருவில் உச்சம்
அதுவும் மாநிலத்தின் உயிர்நாடியாக விளங்கும் 'கார்டன் சிட்டி' என்று அழைக்கப்படும் ஐ.டி கம்பெனிகள் நிறைந்த பெங்களூரு கொரோனாவால் மூச்சுத் திணறி வருகிறது என்றே கூறலாம். நேற்று ஒரே நாளில் மட்டும் பெங்களுருவில் 22,596 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பெங்களுருவில் மட்டும் தினமும் 100 முதல் 200 வரையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

தொடர் உயிரிழப்பு
தொடர் உயிரிழப்புகளால் பெங்களுரு நகரில் உள்ள தகன மேடைகள் 24 மணி நேரமும் இடைவிடாது இயங்கி வருவதால் உடல்களை தகனம் செய்ய டோக்கன் முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களுரு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உடல்களை தகனம் செய்ய சுமார் 290 ஏக்கர் அரசு நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தடுப்பூசி பணி தொடங்காது
இந்த நிலையில் கர்நாடகாவில் மே 1-ம் தேதி முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பின்னர் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக அரசு கூடியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கர்நாடக முழுவதும் தடுப்பூசிக்கான முன்பதிவு பதிவு செயல்முறை நேற்று முதல் தொடங்கியுள்ளது, ஆனால் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முடிவு மாநிலத்திற்கு கணிசமான தடுப்பூசி பங்கைப் பெற்ற பின்னரே முடிவு எடுக்கப்படும்.

காரணம் என்ன?
18 முதல் 44 வயது வரையிலான மக்களுக்கு போடுவதற்காக 1 கோடி தடுப்பூசிகளை கேட்டுள்ளோம். இந்த தடுப்பூசிகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து கிடைத்த பின்னர் மூன்றாம் கட்ட தடுப்பூசி இயக்கம் மாநிலத்தில் தொடங்கப்படும். அதன் பின்னரே அட்டவணை தயார் செய்து தடுப்பூசி போடப்படும். அரசு மற்றும் தனியார் மையங்கள் குறித்த விவரங்கள் அதன் பின்னர் வெளியிடப்படும். அதே வேளையில் 45 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவது மே 1-க்கு பிறகும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடரும் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications