என்ன இப்படி சொல்றாங்க.. பெங்களூரில் நுழைய இனி வரி செலுத்தனும்? வாகன நெரிசலை குறைக்க புதுதிட்டம்!
பெங்களூர்: பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கர்நாடகா அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி பெங்களூர் நகரில் பீக் ஹவர்ஸ்களில் வாகனங்களில் நுழைய வேண்டும் என்றால் Congestion tax செலுத்த வேண்டி இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று பெங்களூர். இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

அதோடு மக்கள் தொகையுடன் சேர்ந்து வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதனால் பெங்களூர் நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக பீக் ஹவர்ஸ்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை தான் பல சாலைகளில் உள்ளது.
பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த கர்நாடகா அரசு மற்றும் பெங்களூர் மாநகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல இடங்களில் ஒரு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதோடு, பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் போக்குவரத்து நெரிசலுக்கு மட்டும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை.
குறிப்பாக அவுட்டர் ரிங் ரோடு, சர்ஜாபூர் ரோடு, ஓசூர் ரோடு, ஓல்டு ஏர்போர்ட் ரோடு, ஓல்டு மெட்ராஸ் ரோடு, பல்லாரி ரோடு, பன்னர்கட்டா ரோடு, கனகபுரா ரோடு, மகாடி ரோடு, வெஸ்ட் ஆப் சார்ட் ரோடு, துமகூரு ரோடு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பீக் ஹவர்ஸ்களில் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பீக் ஹவர்ஸ்களில் பெங்களூர் நகருக்குள் நுழையும் வாகனங்கள் நெரிசல் வரி (Cogestion Tax) செலுத்தும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவது நகருக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தி விடும். மேலும் காற்று மாசுபாட்டை அதிகப்படுத்தும்.
இதனால் பெங்களூருக்குள் நுழைய பீக் ஹவர்ஸ்களில் வாகன நெரிசல் வரி வசூல் செய்வதை நடைமுறை படுத்துவது நல்ல திட்டம் என நிபுணர்கள் கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் தான் இந்த திட்டம் வர உள்ளது. சில முக்கிய சாலைகளில் இருந்து பெங்களூர் நகருக்குள் செல்ல வாகன நெரிசல் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகலாம்.
இந்த திட்டத்தின்படி பெங்களூரில் பீக் ஹவர்ஸ்களில் நுழையும் வாகனங்களிடம் இருந்து வரி வசூலிக்க பாஸ்ட்டேக் முறை பின்பற்றப்பட உள்ளது. அதாவது டோல்கேட்டுகளில் வரிக்கான பணத்தை செலுத்துவது போலேவே பெங்களூர் நகருக்குள் நுழைவதற்கான வாகன நெரிசல் வரியை பொதுமக்கள் தங்களின் வாகனங்களில் உள்ள Fastag முறையில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதனால் வரி கட்டாமல் இருக்க பலரும் பெங்களூர் நகருக்குள் பீக் ஹவர்ஸ்களில் செல்வதை தவிர்ப்பார்கள். அதோடு பீக் ஹவர்ஸ்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்த முயல்வார்கள். இதனால் பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என கர்நாடகா அரசு நம்புகிறது.
இருப்பினும் இந்த திட்டம் என்பது வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் இந்த திட்டம் வெற்றிபெறவில்லை. இதற்கு முன்பு டெல்லி, மும்பை நகரங்களில் இதுபோன்ற திட்டம் அமலுக்கு வந்து தோல்வியடைந்தது. பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள், தனியார் வாகன நிறுவனங்களின் உரிமையாளர்கள் எதிர்த்ததால் டெல்லி, மும்பையில் இந்த திட்டம் என்பது வெற்றி பெறவில்லை. மாறாக சிங்கப்பூர், பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் ஸ்டாக்ஹோம் நகரங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications