சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை? நடவடிக்கை எடுப்பதாக கர்நாடக அமைச்சர் உறுதி
Recommended Video

பெங்களூர்: பெங்களூரு சிறையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா விதிமுறைகளை மீறி சலுகைகளை அனுபவித்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இங்குள்ள அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை கொடுத்துவிட்டு, சசிகலா ஜாலியாக வாழ்க்கை நடத்தி வருவதாக சிறைதுறை டிஐஜியாக இருந்த ரூபா புகார் தெரிவித்தார்.
இதையடுத்து ரூபா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் உண்மையிலேயே சசிகலாவிற்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது என்பதை ஆய்வு செய்வதற்கு ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையில் அப்போதைய சித்தராமையா அரசு ஒரு குழுவை அமைத்தது.
அந்த குழு அரசுக்கு 2017ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கையில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து வெளியே சொல்லப்படவில்லை. இதனிடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரூபா முறையிட்டும், தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தும் அந்த அறிக்கையை பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரூபா கூறுகையில், நான் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனிடையே அறிக்கை மீது கர்நாடக அரசு எதற்காக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீலிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அப்போது வினய்குமார், அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார். கர்நாடக டிஜிபி நீலமணி ராஜுவுடன் கலந்து ஆலோசித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications