கவுரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு ஜாமீன்- நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் குறிவைத்ததாக வாக்குமூலம் தந்தவர்கள்!
பெங்களூர்: 6 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். இந்த கொலையில் தொடர்புடைய 3 குற்றவாளிகளுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்தவர் கவுரி லங்கேஷ்.
2017-ம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் படுகொலை சம்பவத்தில் மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மோகன் நாயக்குக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் இறுதிக் குற்றப்பத்திரிகை இன்னமு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்குக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் தங்களுக்கும் ஜாமீன் வழங்கக் கோரி எஞ்சிய 3 குற்றவாளிகளும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் கலாபுரகி கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி 3 குற்றவாளிகளான அமித் திவேகர், நவீன் குமார், சுரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தற்போது ஜாமீன் பெற்றுள்ள நவீன்குமார்தான், பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டி இருந்தோம் என ஒப்புதல் வாக்குமூலம் தந்தவர். கவுரி லங்கேஷைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜூக்கு குறி வைத்திருந்தோம். ஆனால் அதற்குள் எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர் எனவும் நவீன்குமார் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜ், இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டிவிட் செய்துள்ளார். அதில் எதிர்க்கும் குரல்களை ஒடுக்க திட்டமிடுகிறார்கள். என்னுடைய குரல் இன்னும் வலுப்பெறும். இவ்வளவு வெறுப்பரசியலை செய்துவிட்டு நீங்கள் தப்பிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா என கோபம் கொப்பளிக்க சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications