துரத்தும் சனாதனம்.. உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதான நடவடிக்கை- கர்நாடகா கோர்ட் தடை!
பெங்களூர்: சனாதன தர்மம் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்க்கை எடுப்பதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். அதாவது, "

இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பது நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என பேசியிருந்தார்.
ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பாஜகவினர் பொய் பிரசாரம் செய்தனர்.
இதற்கு பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையையே கூட்டி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தர அறிவுறுத்தினார். லோக்சபா தேர்தலில் கூட பிரதமர் மோடி உதயநிதியின் சனாதன தர்ம எதிர்ப்பு பேச்சை சுட்டிக்காட்டி வட இந்தியாவில் பிரசாரம் செய்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதனிடையே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் முன்பாக நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications