காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்: சுப்ரிம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் - கர்நாடக உள்துறை அமைச்சர்
பெங்களூரு: தமிழக அரசு கையில் எடுத்த்துள்ள காவிரி இணைப்பு திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆதாய நோக்கத்துடன் இந்த காவிரி இணைப்பு திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது என்று பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டினார்.
காவிரியில் உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு கர்நாடகா அனுமதிக்காது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஏற்கனவே கூறியிருந்தார்.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்
மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வழியாக குண்டாற்றுடன் இணைக்கும் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டினார்.

கர்நாடகா கடும் எதிர்ப்பு
ரூ.6,941 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தால் கரூர், திருச்சி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த திட்டத்துக்கு கர்நாடக மாநில விவசாய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில முதல்வர், முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் ஒரு சேர தமிழகத்துக்கு எதிராக பொங்கியெழுந்துள்ளனர்.

கர்நாடக முதல்வர் கண்டனம்
காவிரியில் உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு கர்நாடகா அனுமதிக்காது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறி இருந்தார்.இந்த நிலையில் தமிழக அரசு கையில் எடுத்த்துள்ள காவிரி இணைப்பு திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- காவிரியில் திட்ட பணிகள் மேற்கொள்ள தமிழக அரசுக்கு சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அனுமதியில்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். காவிரி வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் காவிரி இணைப்பு திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் ஆதாய நோக்கத்துடன் இந்த காவிரி இணைப்பு திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது என்று பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications