ஹிந்தியில் பேசனும்! பெங்களூரில் ஆட்டோகாரரிடம் எகிறியவரை கன்னடத்தில் மன்னிப்பு கேட்க வைத்த கன்னடர்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான விவாதமாகி கொண்டிருக்கும் விஷயம் மொழி பிரச்சனைதான். ஆட்டோ ஓட்டுநரை இந்தியில் பேச ஒருவர் வற்புறுத்தியிருந்தார். இன்று அவர் கன்னட மொழியில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. இதனையடுத்து மொழிப்பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

பெங்களூரில் இளைஞர் ஒருவர் ஆட்டோவில் ஏறியிருக்கிறார். வழக்கமாக ஆட்டோ பயணத்தில் டிரைவருடன் ஏதாவது நாம் பேசிக்கொண்டே வருவோம் அல்லவா, அது போல அந்த இளைஞரும் பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறார். ஆனால் இந்த பேச்சு விவாதமாக மாறியிருக்கிறது. ஆட்டோவிலிருந்து இறங்கி போகும்போது, "நீ நொய்டாவில் இருந்தாலும் சரி, பெங்களூரில் இருந்தாலும் சரி, இந்தியில்தான் பேச வேண்டும்" என்று ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது தாய் மொழியான கன்னடத்தில், "நீ பெங்களூருக்கு வந்திருக்க. நீதான் கன்னடத்தில் பேசனும். நான் இந்தியில் பேச மாட்டேன்" என்று தீர்மானமாக கூறியுள்ளார். இந்த வீடியோதான் கர்நாடாகாவில் கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாக்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
எல்லோருக்கும் அவரவர் தாய் மொழிதான் ஒஸ்தி. இருப்பினும், யாரும் மற்ற மொழி பேசுபவர்களை பார்த்து தனது தாய் மொழியை மட்டுமே பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்தி பேசுபவர்கள் மட்டும் ஏன் இப்படி அட்ராசிட்டி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என பலரும் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்திருந்தார்கள். இப்படி கட்டாயப்படுத்துபவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தியிருந்தனர்.
இப்படி இருக்கையில் இன்று மற்றொரு வீடியோ பரவலாக ஷேராகி வருகிறது. அதில், ஹிந்தியில் பேச சொன்ன இளைஞர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதுவும் கன்னட மொழியில்.
"நான் கடந்த 9 ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் செய்த விஷயத்திற்காக அருகில் உள்ள காவல்நிலையத்திலும் சென்று மன்னிப்பு கேட்டிருக்கிறேன். உணர்வுகளை புண்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்" என கூறியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் காட்டமாக பதிலளித்திருக்கிறார்கள். "நீங்கள் இன்று கட்டாயப்படுத்துவது போல, மற்ற மொழிக்காரர்கள் வந்து இதேபோல உங்களை சொன்னால் அப்போதுதான் அதன் பாதிப்பு என்ன என்று உங்களுக்கு புரியும்" என்று கூறியுள்ள நெட்டிசன்கள், "இத்தனை ஆண்டுகளாக உங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் மாநிலத்திற்கும், அதன் மொழிக்கும் நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்" என்றும் கூறியுள்ளனர்.
சிலர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பலர் இவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆக இந்த பிரச்சனை இதோடு முடிந்தால் நல்லது என்றும் ஒருசிலர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications