இதுதான் நம் இந்தியா.. வரமகாலட்சுமி பண்டிகையை கொண்டாடிய முஸ்லிம் குடும்பம்.. கர்நாடகாவில் நெகிழ்ச்சி
பெங்களூர்: கர்நாடகத்தில் வரமகாலட்சுமி பண்டிகைையொட்டி முஸ்லிம் குடும்பம் ஒன்று வீட்டில் மாவிலை தோரணம் கட்டி, தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தி உள்ளனர்.
சமீபகாலமாக இந்தியாவில் மதம்சார்ந்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சிலர் பேசுகின்றனர். இது கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி வன்முறைக்கு வழிவகுத்துள்ளது. மேலும் மதம்சார்ந்து பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பேசியவர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் நாட்டில் ஆங்காங்கே தான் சார்ந்த மதங்களை தாண்டி பிற மத கடவுள்கள் வணங்கி மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக பலர் இருக்கின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் கர்நாடகா மாநிலம் கொப்பலில் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
வரமகாலட்சுமி பண்டிகை
கர்நாடகாவில் ஆண்டுதோறும் வரமகாலட்மி பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆடி கடைசிவெள்ளி பவுர்ணமி திதியாக உள்ளது. இதனால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் வரலட்சுமி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதாவது திருமணமான பெண்கள் கணவரின் ஆயுள் அதிரிக்க வேண்டி விரதம் இருந்து மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வார்கள்.
முஸ்லிம் குடும்பத்தில் பண்டிகை
நேற்று முன்தினம் கர்நாடகத்தில் இந்துக்களின் வீடுகளில் வரமகாலட்சுமி பண்டிகை பூஜை நடந்தன. வீட்டு பூஜை அறையில் வரமகாலட்சுமி சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து பூஜை பொருட்களுடன் வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடப்பட்டது. கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டம் அவலந்தி கிராமத்தை சேர்ந்த முஸ்லிமான நஜ்ருதீன் என்பவர் தனது குடும்பத்துடன் வரமகாலட்சுமி பண்டிகையை கொண்டாடினார்.
தீபம் ஏற்றி பூஜை
வரமகாலட்சுமி பண்டிகையொட்டி நஜ்ருதீன் தனது மனைவியுடன் மகாலட்சுமியின் போட்டோவை அலங்கரித்து பூஜை அறையில் வைத்து வழிபட்டார். மேலும் பிரசாதமாக உணவுகள் தயாரித்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார். மேலும் வரலட்சுமி பண்டிகையொட்டி வீட்டில் தீபம் ஏற்றியவர்கள் மாவிலை தோரணம் கட்டி இருந்தனர்.
3 ஆண்டுகளாக கொண்டாட்டம்
இதுபற்றி நஜ்ருதீன் கூறுகையில், ‛‛கடந்த 3 ஆண்டுகளாக எனது குடும்பத்தினருடன் சேர்ந்து வரமகாலட்சுமி பண்டிகையை கொண்டாடி வருகிறேன். வரமகாலட்சுமி தினத்தில் தான் எனது வீட்டு கிரஹப்பிரவேசத்தை நடத்தினேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமத்தில் நடக்கும் இந்து பண்டிகைகளிலும் கலந்து கொள்கிறேன்'' என்றார். இதற்கிடையே நஜ்ருதீன் தனது மனைவி, குழந்தையுடன் வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடிய போட்டோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.