கர்நாடகாவில் திருப்பம்.. ஆட்டத்தை தொடங்கினார் சபாநாயகர்.. 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்
பெங்களூரு: பாஜகவுக்கு ஆதரவளித்த கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கேஆர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிற அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பதவியேற்றது. இந்நிலையில் லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது.
அதன் பின்னர் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைப்பதற்கு ஏதுவாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
பாஜகவுக்கு ஆதரவு
இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதில் கூடுதல் அதிர்ச்சியாக சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவரும் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினார். இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதியானது.
ராஜினாமா ஏற்பு இல்லை
ஆனால் அவர்கள் இதுவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. இந்த சூழலில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்களில் 15 பேர் கலந்து கொள்ளவில்லை. ஒருவர் மட்டும் காங்கிரஸ்க்கு ஆதரவாக திரும்பினார்.
சபாநாயகர் ரமேஷ்குமார்
இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவளித்த கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரை தகுதி நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பித்தார். பிற அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
சபாநாயகர் பரிசீலனை
இதனால் மீதமுள்ள 13 அதிருப்தி எம்எல்ஏக்களும் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு பதவியேற்கும் வரை ரமேஷ்குமார் தான் சபாநாயகராக தொடர்வார் என்பதால், அதற்குள் 15 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. இந்த 15 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட் பின்னர் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்ட முடியாது. நடப்பு சட்டசபை காலம் முடிந்த பிறகுதான் அவர்களால் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக முடியும். மேலவை உறுப்பினர்களாகவும் நடப்பு சட்டசபை காலத்தில் இவர்களை நியமிக்க முடியாது.