Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக அடுத்த முதல்வர் யார்.. இன்று இரவு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.. பெரும் எதிர்பார்ப்பு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி விலகிய நிலையில், புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று இரவு 7.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Recommended Video

    Who Is Basavaraj Bommai | Karnataka new CM

    கர்நாடக பாஜகவில் அசைக்கமுடியாத தலைவராக இருக்கக் கூடியவர் எடியூரப்பா. இவருக்கு மாற்றாக அங்கு பாஜக சார்பில் வேறு ஒரு முதல்வர் வேட்பாளரை பாஜக மட்டுமல்ல.. மக்கள் கூட கனவிலும் நினைத்து பார்த்தது கிடையாது.

    ஒன்றுமே இல்லாமல் இருந்த பாஜகவை பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு கொண்டு சென்றவர் எடியூரப்பா. சிறப்பான, பேச்சாளர் மற்றும் மக்கள் ஆதரவு கொண்ட தலைவர் என்பதால் பாஜகவில் வேறு யாரும் அங்கு பெரிய தலைவராக உருவெடுக்க முடியவில்லை.

    ஏற்றுக் கொண்ட எடியூரப்பா

    ஏற்றுக் கொண்ட எடியூரப்பா

    இந்த நிலையில்தான், வயது மூப்பை அடிப்படையாகக் கொண்டு அவரை முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடம் கேட்டுக்கொண்டது. 75 வயது என்பது பாஜகவில் உயர் பதவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு என்பதை காரணமாக காட்டி 78 வயது எடியூரப்பாவை பதவி விலக வற்புறுத்தியது பாஜக தலைமை. வழக்கமாக இது போன்ற கோரிக்கைகளை ஏற்க கூடிய நபர் கிடையாது எடியூரப்பா. ஆனால் இந்த முறை என்ன நடந்ததோ தெரியவில்லை, ஓகே.. சொல்லிவிட்டு நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    தனிக் கட்சி துவங்கும் திட்டம் இல்லை

    தனிக் கட்சி துவங்கும் திட்டம் இல்லை

    பதவி விலகுவதாக அறிவிக்கும் போது அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விம்மியபடி பேசினார். ஒன்றுமே இல்லாமல் இருந்த ஒரு கட்சியை உயரத்துக்கு கொண்டு வந்த தன்னை பதவி விலக சொல்கிறார்களே என்ற ஆதங்கம் அவரது பேச்சில் தெரிந்தது. இருப்பினும் கனிம குவாரி ஊழல் தொடர்பான பிரச்சினையின் போது, 8 வருடங்கள் முன்பு, ஒருமுறை எடியூரப்பாவை பாஜக மேலிடம் பதவி விலகச் சொல்லி மீண்டும் பதவி வழங்க மறுத்தபோது தனியாக கட்சி துவங்கினார். கர்நாடக ஜனதா கட்சி என்றதற்கு பெயர் சூட்டினார். கட்சி துவங்கி முதல் தேர்தலிலேயே 10% அளவுக்கு வாக்குகளையும் வாங்கி அசத்தினார். அது போன்று திட்டம் இப்போது அவரிடம் இல்லை.

    மகனுக்கு பொறுப்பு

    மகனுக்கு பொறுப்பு

    தனிக்கட்சி நடத்துவதற்கு மிகுந்த பணம் செலவாகும்.. மத்தியில் பாஜக அரசு மிகவும் வலிமையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் முன்பு மாதிரி தனிக்கட்சி துவங்கி வெற்றிகரமாக நடத்த முடியாது. எனவே கர்நாடக மாநில பாஜக தலைவராக தனது மகனுக்கு பொறுப்பை வாங்கி கொடுப்பதன் மூலமாக அடுத்த தேர்தலில் வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தன்னிடமே வைத்துக் கொள்ள முடியும் என்று எடியூரப்பா நினைப்பதால், இந்த முறை பாஜக மேலிடம் சொன்னதை எடியூரப்பா அப்படியே செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    நேரடியாக தலையிடும் டெல்லி

    நேரடியாக தலையிடும் டெல்லி

    எடியூரப்பா போன்ற மக்கள் ஆதரவு கொண்ட ஒரு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதால், இப்போது கர்நாடக விவகாரங்களில், டெல்லி நேரடியாக தலையிட ஆரம்பித்துள்ளது. அடுத்த முதல்வர் யார் என்பதை டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகமான விதான சவுதா மற்றும் ஆளுநர் மாளிகைக்கு அருகே அமைந்துள்ள கேபிடல் என்ற ஹோட்டலில் இந்த கூட்டம் நடைபெறும். பாஜக சார்பில் பார்வையாளராக வர உள்ள தர்மேந்திர பிரதான் எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்பார். இப்போது எம்எல்ஏவாக இருக்கும் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க பெரும்பாலான எம்எல்ஏக்கள் சம்மதம் தெரிவித்தால் அதை பாஜக மேலிடம் பரிசீலனை செய்யும். அப்படி இல்லாவிட்டால் வெளியே இருந்து.. அதாவது எம்எல்ஏவாக இல்லாத கர்நாடகாவை சேர்ந்த ஒரு பாஜக இளம் தலைவரை சர்ப்ரைசாக முதல்வராகும் திட்டம் டெல்லி தலைமையிடம் இருக்கிறது. இப்படித்தான் உ.பி.யில் எம்எல்ஏக்களில் இருந்து ஒருவரை முதல்வராக்காமல், எம்.பி. பதவியிலிருந்த யோகி ஆதித்யநாத் திடீரென முதல்வராக்கப்பட்டார்.

    அடுத்த முதல்வர் யார்?

    அடுத்த முதல்வர் யார்?

    அமைச்சர்களாக இருக்கும், லட்சுமணன் சவதி அல்லது முருகேஷ் நிரானி அல்லது உள்துறை அமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை ஆகியோர் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க எம்எல்ஏக்கள் இடம் கருத்து கேட்கப்படும் என்று தெரிகிறது . ஆனால் இது வழக்கமான கூட்டமாக இருக்காது. எம்எல்ஏக்கள் என்ன கருத்து தெரிவித்தாலும் அது டெல்லி தலைமைக்கு சென்று அதன் பிறகுதான் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்பட போகிறது. முன்பெல்லாம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை பாஜக செயல்படுத்தும். இப்போது எடியூரப்பா விலகியுள்ளதால், கட்டுப்பாடு டெல்லிக்குப் போய் விட்டது என்கிறார்கள் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள்.

    எம்எல்ஏக்கள் கூட்டம்

    எம்எல்ஏக்கள் கூட்டம்

    கர்நாடகாவில் புதிய முதல்வராக யார் பொறுப்பு ஏற்க போகிறார்களோ, அவர்கள் முகம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மக்கள் மத்தியில் பழகி விடும் என்பதால் அவரது தலைமையில் 2023 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திப்பது பாஜகவுக்கு எளிதாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. எனவே இன்றைய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் யார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் இதில் சற்று பிசகினாலும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    பாஜக எதிர்காலம்

    பாஜக எதிர்காலம்

    குறிப்பாக, லிங்காயத்து சமுதாய மக்கள் மற்றும் லிங்காயத்து மடாதிபதிகள் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும். எடியூரப்பாவுக்காக பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் கர்நாடகாவில் பெரும்பான்மையாக இருக்கும் லிங்காயத்துகள், காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தால் அது பாஜகவுக்கு, எழுந்திருக்க முடியாத மிகப்பெரிய அடியாக பார்க்கப்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எனவே அடுத்த முதல்வர் யார் என்பதையும், எடியூரப்பா அல்லது அவரது மகனுக்கு பாஜக எந்த மாதிரி கவுரவம் கொடுக்கப் போகிறது என்பதையும் பொறுத்துதான் கர்நாடகாவில் பாஜக வின் எதிர்காலம் இருக்கப்போகிறது

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+