ராமர் கற்பனை கேரக்டர்! மகாபாரதம் நிஜமல்ல! பாடம் நடத்திய கர்நாடக ஆசிரியர்! பாய்ந்த டிஸ்மிஸ் நடவடிக்கை
பெங்களூரு: மகாபாரதம், ராமாயணம் ஆகியவை கற்பனை என்று ஆசிரியர் ஒருவர் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த ஆசிரியர் இப்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் ஒருவர் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை கற்பனை என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக வலதுசாரி அமைப்பினர் இணையத்தில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஆசிரியர் மீதான எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்த நிலையில், கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த அந்த பள்ளி ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
புகார்: பாஜக எம்.எல்.ஏ வேத்யாஸ் காமத்தின் ஆதரவுடன் இந்த வலதுசாரி குழு புகார் அளித்துள்ளனர். அதாவது மங்களூரில் உள்ள செயின்ட் ஜெரோசா தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த அந்த ஆசிரியர், மகாபாரதமும் ராமாயணமும் "கற்பனை" என்று மாணவர்களிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. மேலும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அந்த ஆசிரியர் பேசியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
பிரதமர் மோடி குறித்து பேசும்போது அந்த ஆசிரியர் 2002 கோத்ரா கலவரம் மற்றும் பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கை ஆசிரியர் குறிப்பிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த ஆசிரியர் திட்டமிட்டு குழந்தைகளின் மனதில் வெறுப்பு உணர்வுகளைத் தூண்ட முயல்கிறார் என்பதே அவர்கள் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் தலைமையில் அவர்கள் கடந்த சனிக்கிழமை போராட்டத்தையும் நடத்தினர்,
பாஜக எம்எல்ஏ: இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ கூறுகையில், "இப்படிப்பட்ட ஆசிரியரை நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் நடுநிலை என்ன ஆனது.. ஏன் அந்த ஆசிரியரை வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் வணங்கும் இயேசு அமைதியை விரும்புகிறார். ஆனால் நீங்கள் எங்கள் இந்துக் குழந்தைகள் பொட்டு வைக்கக் கூடாது..
பூ வைக்கக் கூடாது கொலுசு அணிய வேண்டாம் என்கிறீர்கள். ராமர் மீது பால் ஊற்றுவதால் பால் வீணாகும் என்கிறீர்கள்.. உங்கள் நம்பிக்கையை யாராவது அவமதித்தால், நீங்கள் அமைதியாக இருக்க மாட்டீர்கள் தானே" என்று ஆவேசமாகப் பேசினார்.
கற்பனை கதாபாத்திரம்: 7 ஆம் வகுப்பு மாணவ மாணவரிடம் அந்த ஆசிரியர் இந்த கருத்துகளைக் கூறியிருக்கிறார். ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றும் ராமாயணம் ஒரு கற்பனை என்றும் அவர் கூறியதாக மாணவர்கள் பெற்றோர்கள் கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக பொது கல்வித்துறை இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார். அதேநேரம் இந்த விவகாரம் பேசுபொருள் ஆன நிலையில், அந்த ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
டிஸ்மிஸ்: இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செயின்ட் ஜெரோசா பள்ளிக்கு 60 ஆண்டுக்கால வரலாறு உள்ளது,. இன்றுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பெற்றோர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்க வைப்பதாக அமைந்துவிட்டது. எங்கள் நடவடிக்கை அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும்,
எங்கள் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. வலதுசாரி அமைப்பினர் அந்த ஆசிரியர் மீது போலீசாரிடமும் புகார் அளித்தாகத் தெரிகிறது. இருப்பினும், அந்த ஆசிரியர் மீது இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications