சர்ச்சை.! ஹிஜாப் அணிந்து வந்து மாணவிகளை.. தனி அறையில் அமர வைத்த கல்லூரி நிர்வாகம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை மற்ற மாணவிகளுடன் அமர விடாமல், தனி அறையில் அமர வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர பல்வேறு கல்லூரிகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரும் எடுத்து வருகிறது.
உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் ஹிஜாப் அணிந்து வர பல்வேறு கல்லூரிகளும் அனுமதி மறுத்து வருகின்றனர்.

ஹிஜாப்
அங்குள்ள பல பியூ கல்லூரிகளும் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்க தொடங்கியுள்ளது பதற்றத்தை அதிகரித்து வருகிறது. முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து, சில இந்து மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்தனர். மேலும், சில இந்து மாணவர்களும் காவி நிற துண்டு அணிந்து வருவதால் அங்கு நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.

கல்லூரி நிர்வாகம்
சில மாணவிகள் ஹிஜாப் அணிந்துள்ளதால் தங்களைக் கல்லூரிகளுக்கு உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் இதனால் கழிப்பறைக்குக் கூட செல்ல முடிவதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். அதேநேரம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை நாங்கள் வீட்டிற்குத் திரும்பச் செல்லும்படி கூறினோம் என்று தெரிவித்த கல்லூரி நிர்வாகம், ஆனால் அவர்கள் திரும்பிச் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.

தனி அறை
இருப்பினும், கல்லூரி நிர்வாகங்களின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபூரில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை இன்று கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதித்தன. இருப்பினும், அந்த மாணவிகளை மட்டும் கல்லூரியில் மற்ற மாணவிகளுடன் அமர விடாமல், தனி அறையில் அமர வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு வகுப்புகளையும் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

கேள்வி
இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகளோ, கடந்த காலங்களில் ஹிஜாப் அணிந்து வந்த போது யாரும் எதுவும் தெரிவிக்காத நிலையில், இப்போது தடை விதித்துள்ளது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், தாங்கள் புதிய உத்தரவை எதையும் பிறப்பிக்கவில்லை என்றும் ஏற்கனவே இருக்கும் விதிகளைத் தான் செயல்படுத்துவதாகக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக கல்வித் துறை அமைச்சர்
இது தொடர்பாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் கூறுகையில், "கல்லூரிகளில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே யூனிபார்ம் தான். மதச் சடங்குகளை மாணவ - மாணவிகள் தங்கள் வீடுகளில் பின்பற்றிக்கொள்ளலாம். ஹிஜாப் அணிய வேண்டும் என்று விருப்போர் பள்ளிக்கு வரத் தேவையில்லை" என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications