மத்திய பாஜக அரசு சட்டத்துக்கு எதிர்ப்பு- கர்நாடகாவில் 3-வது நாளாக லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!
பெங்களூர்: மத்திய பாஜக அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடகா மாநிலத்தில் லாரி ஓட்டுநர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடருகின்றனர். கர்நாடகாவில் லாரி ஓட்டுநர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்கள் கடும் தேக்கமடைந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த புதிய சட்டமானது விபத்தை ஏற்படுத்தும் லாரி ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ7 லட்சம் அபராதமும் விதிக்க வகை செய்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்த உடனேயே வட இந்திய மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அப்போது மத்திய அரசு இந்த , சட்டவிதிகளை நிறுத்தி வைப்பதாக கூறியது. ஆனாலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என்கின்றனர் லாரி உரிமையாளர்கள்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசின் இப்புதிய சட்டத்துக்கு எதிராக கர்நாடகா மாநிலம் முழுவதும் ஜனவரி 17-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கர்நாடகா முழுவதும் 3 நாட்களாக பல லட்சக்கணக்கான லாரிகள் இயங்கவில்லை. கர்நாடகாவில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளை கொண்டு செல்ல முடியாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் கர்நாடகா மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி உள்ள ஓட்டுநர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்தும் லாரிகள் இயக்கப்படவில்லை. மத்திய அரசு புதிய சட்டத்தை திரும்பப் பெறும் வரை லாரிகளை இயக்கமாட்டோம் என லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் அத்திப்பள்ளி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் உள்ள வாகன சோதனை சாவடிகள், டோல்கேட் ஆகியவற்றை 7 கிமீ தொலைவாக அமைக்க வேண்டும் என்பதும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது கர்நாடகா மக்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications