கர்நாடகா பரபரப்பு-தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சி கலைப்பு?பாஜகவில் கூண்டோடு ஐக்கியம்? குமாரசாமி விளக்கம்!
பெங்களூர்: தேவகவுடா குடும்பத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை (ஜேடிஎஸ்) பாஜகவில் இணைக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்படுவது தொடர்பாக அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி பரபர விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஜேடிஎஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் ஜேடிஎஸ் கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியான ஒக்கலிகா கவுடா ஓட்டுகள், பெருமளவு காங்கிரஸுக்கே போனது. இதனால் ஒக்கலிகா பெல்ட்டிலேயே ஜேடிஎஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது.

சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என பல்லவி ஜேடிஎஸ் பாடத் தொடங்கியது. இது தொடர்பாக பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில்தான், ஜேடிஎஸ் கட்சியை அப்படியே பாஜகவுடன் இணைத்துவிட வேண்டும் என டெல்லி மேலிடம் நிபந்தனை விதித்து நெருக்கடி தருகிறது என தகவல்கள் வெளியாகின.
இன்னொரு பக்கம், ஜேடிஎஸ் கட்சியுடனேயே கூட்டணிதான்; லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ்-பாஜக இணைந்து காங்கிரஸை வீழ்த்தும் என்றும் கர்நாடகா பாஜக தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இதனால் ஜேடிஎஸ் தொண்டர்களிடையே பெரும் குழப்பம் உருவானது.
இதனால் ஜேடிஎஸ் கட்சி கலைக்கப்பட்டு பாஜகவுடன் இணைகிறதா? என விளக்கம் தர வேண்டிய நிலை குமாரசாமிக்கு உருவானது. இது தொடர்பாக குமாரசாமி அளித்த விளக்கம்: எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் ஒரு கண்ணியமான, கவுரவமான கூட்டணியைத்தான் எதிர்பார்க்கிறோம். விரும்புகிறோம். அதற்குதான் ஒப்புக் கொள்வோம்.

பாஜகவுடன் ஜேடிஎஸ் கட்சியை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒருபோதும் ஜேடிஎஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்கும் சூழ்நிலையும் வரவே வராது. அப்படியான தகவல்களில் உண்மை எதுவும் இல்லை. இவ்வாறு குமாரசாமி கூறினார்.
மேலும் ஜேடிஎஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், பாஜகவுடனான கூட்டணி என்பது 2028 சட்டசபை தேர்தல் வரை தொடரக் கூடியதாக இருக்கும். ஆனால் பாஜகவுடன் இணையமாட்டோம். ஜேடிஎஸ் கட்சி கர்நாடகா மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சியாகவே தொடர்ந்து செயல்படும் என்றார்.












Click it and Unblock the Notifications