கர்நாடகாவில் விழுந்த ராட்சத பலூன்.. உள்ளே திறந்து பார்த்தால் ஷாக்.. சீனாவின் உளவு பலூனா? அதிர்ச்சி
சீனாவில் இருந்து இந்த பலூன் அனுப்பப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகிக்ப்படுகிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் திடீரென வந்து விழுந்த ராட்சத பலூனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சீனா அனுப்பிய உளவு பலூனாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த பலூனில் பல்வேறு வித்தியாசமான எலக்ட்ரானிக் சாதனங்களும் பொருத்தப்பட்டிருப்பதால் இந்த சந்தேகம் வலுத்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில், இந்த பலூன் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் அனுப்பபட்டது அல்ல என்பது தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கே ஷாக்
அமெரிக்காவில் கடந்த மாதம் பல ஆயிரம் அடிக்கு மேலே ஒரு விசித்திரமான பொருள் பறப்பதை சிலர் பார்த்தனர். பின்னர் இதுகுறித்த தகவலின் பேரில் டெலஸ்கோப்பில் போலீஸார் பார்த்த போது, அது ஒரு ராட்சத பலூன் என்பது தெரியவந்தது. பின்னர், விண்வெளித்துறையினர் நடத்திய சோதனையில் அது சீன நாட்டின் பலூன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதில் சக்திவாய்ந்த கேமராவும், பல எலக்ட்ரானிக் சாதனங்களும் பொருத்தப்பட்டிருந்ததால் தங்கள் நாட்டை உளவுபார்க்க இந்த பலூனை சீனா அனுப்பியிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால், சீனா இதை திட்டவட்டமாக மறுத்தது.

பல நாடுகளில் பலூன் மூலம் உளவு
முதலில், அந்த பலூன் தங்களுக்கு நாட்டுக்கே சொந்தம் இல்லை எனக் கூறிய சீனா, பின்னர் வானிலை ஆய்வுக்காக அந்த பலூனை தாங்கள் அனுப்பியதாக தெரிவித்தது. இதனிடையே, அமெரிக்காவின் அணு ஆயுத கிடங்கு, ராணுவத் தளம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு மேலே அந்த பலூன் பறந்ததால், சுமார் 50 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து அந்த ராட்சத பலூனை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. பின்னர், அதில் பொருத்தப்பட்டிருந்த எலக்ட்ரானிக் சாதனங்கள், கேமரா உள்ளிட்டவற்றை அமெரிக்க ராணுவம் ஆய்வு செய்து வருகிறது. மேலும், இந்தியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் சீனா இதுபோல ராட்சத பலூன்கள் மூலமாக சீனா உளவுபார்த்து வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

கர்நாடகாவில்..
இந்த சூழலில், கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கடிகர்வின்கோப்பா கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் நேற்று ஒரு ராட்சத பலூன் பறந்து வந்து விழுந்தது. இதுகுறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் போலீஸார் அப்பகுதிக்கு வந்து கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அந்த ராட்சத பலூனை சோதனை செய்தனர். அப்போது அதில் பல வித்தியாசமான எலக்ட்ரானிக் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

சீனாவின் வேலையா?
ரிமோட் உதவியுடன் இந்த பலூன் இயக்கப்பட்டதாகவும், திடீரென காற்றின் வேகம் அதிகரித்ததால் கட்டுப்பாட்டை இழந்து ஏதேனும் மலையில் மோதி இந்த பலூன் இங்கு வந்து விழுந்திருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பலூனில் உள்ள கருவிகளை பார்க்கும் போது உளவு பார்க்கும் சாதனங்களை போல இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் இருந்து இந்த பலூன் அனுப்பப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகிக்ப்படுகிறது. போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications