2 பள்ளி சிறுமிகள்.. சீண்டிய சாமியார்! கர்நாடக மடத்தில் அரங்கேறிய கொடூரம்.. இழுபறிக்கு பின் கைது
பெங்களூரு: பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள கர்நாடகா சாமியார் சிவமூர்த்தி ஷரனாருவை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் லிங்காயத்து மதத்தினரின் முருகமடம் இயங்கி வருகிறது. இங்கு மடாதிபதியாக செயல்பட்டு வருபவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி.. அதிகபட்சம் 400 ரூபாய்தான்.. சீரம் நிறுவனம் அசத்தல்!
மடாதிபதி மீது புகார்
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போக்சோ வழக்கு
இதனை தொடர்ந்து மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மடாதிபதிக்கு உடந்தையாக இருந்து வந்ததாக விடுதியின் வார்டன் ரஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
புகாருக்கு மறுப்பு
கர்நாடகாவில் அதிக செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்த புகார்கள் உண்மைக்கு எதிரானவை. இதன் பின்னணியில் முன்னாள் எம்எல்ஏவும், மடத்தின் நிர்வாக அதிகாரி எஸ்கே பசவராஜன் இருக்கின்றனர்." என என்.விஸ்வநாத் தெரிவித்தார்.
முதலமைச்சர் விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "இது மிகவும் முக்கியமான வழக்கு. போக்சோ மற்றும் கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவதால், கருத்து தெரிவிக்க தெரிவிக்க முடியாது. போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் உண்மை வெளிவரும்." என்றார்.
மடாதிபதி கைது
இந்த விவகாரத்தில் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை கர்நாடக அரசு இதுவரை கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து மடத்தின் விடுதி காப்பாளரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சற்று முன்பாக சாமியார் சிவமூர்த்தி ஷரனாருவை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.