லாக்டவுன்.. கொரோனா.. கவலையே இல்லை.. ஊரை கூட்டி பர்த்டேவுக்கு பிரியாணி விருந்து போட்ட பாஜக எம்எல்ஏ!
ஊரடங்கில் பாஜக எம்எல்ஏ பிறந்த நாள் கொண்டாடி உள்ளார்
பெங்களூரு: ஊரடங்கு, லாக் டவுன் எதை பத்தியும் கவலை இல்லையே.. 100 பேரை கூப்பிட்டு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளார் பாஜக எம்எல்ஏ ஒருவர்.. அத்துடன் 500 பேருக்கு பிரியாணி போட்டு பிறந்த நாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நாடு முழுவதும் லாக் டவுன் அமலில் உள்ளது.. அப்படி இருந்தும் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியவில்லை.. நாளுக்கு நாள் வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
உயிரிழப்புகளும் ஆங்காங்கே நடந்து நமக்கு பயத்தை உண்டு பண்ணி வருகின்றன.. ஆயிரக்கணக்கானோர் கண்காணிப்பில் உள்ளனர்.. தொற்று உள்ளவர்கள் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.
கோரிக்கை
லாக் டவுன் பிறப்பித்தே இந்த நிலை உள்ளதால், ஊரடங்கினை மேலும் தொடர வேண்டும் என மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.. சில மாநிலங்களில் மீண்டும் அமல்படுத்தப்பட்டும் உள்ளன.. மக்களின் நலன் கருதி மத்திய அரசும் மாநில முதல்வர்களின் கோரிக்கையை பரிசீலித்து வரும்நிலையில், ஆளும் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் அனைத்து விதிகளையும் மீற தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்!
ஜெயராம்
கர்நாடக பாஜக எம்எல்ஏ பெயர் ஏஎஸ் ஜெயராம்.. இவருக்குதான் ஹேப்பி பர்த்டே.. தன்னுடைய 51வது பிறந்த நாளை ஜெயராம் விமரிசையாக கொண்டாட நினைத்தார்.. தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள இடகுரு தான் இவரது சொந்த கிராமம். அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தன் பிறந்த நாளையொட்டி நூற்றுக்கணக்கானோரை வரவழைத்தார்.. அவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
ஹனுமன் ஜெயந்தி
ஜெயராம் பிறந்த நாள், ஹனுமன் ஜெயந்தியுடன் இணைந்ததால் ஆஞ்சனேய ஸ்வாமி கோயிலில் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது... 500-க்கும் மேற்பட்டோருக்கு பிறந்த நாளையொட்டி பிரியாணி வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.. இப்படி ஊரை கூப்பிட்டு பிறந்த நாளை கொண்டாடியது குறித்து போலீசாருக்கும் தகவல் எட்டியுள்ளது.
கேக் வெட்டினார்
ஆனால் தாம் எந்த லாக் டவுன் விதிமுறைகளையும் மீறவில்லை என்று ஜெயராம், லெமன் சாதம் போடும்போது மட்டும் மக்கள் அவசரத்தில் வந்ததால், அந்த சமயத்தில் மட்டும் சமூக விலகல் இல்லாமல் போனது என்று ஒப்புக் கொண்டுள்ளார். இது எல்லாவற்றையும் விட முக்கியமான மேட்டர் என்னவென்றால், சமூக விலகலை மீறவே இல்லை என்று சொல்லும் ஜெயராம், 100 பேர் முன்னிலையில் கேக் வெட்டும்போது, கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு வெட்டுகிறார்.
வைரல் போட்டோ
தலையில் ஒரு பெரிய தலைப்பாகை கட்டிக் கொண்டு, கையில் கிளவுஸ், கத்தியுடன் கேக் வெட்டும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைவிட இன்னொரு ஹைலைட், பிறந்த நாள் விழாவில் பேசியபோது, கொரோனா தொற்றில் இருந்து மக்கள் எப்படி தங்களை காத்து கொள்ள வேண்டும், வீடுகளுக்குள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்ததுதான்! பாஜக எம்எல்ஏவின் இந்த பர்த்டே பார்ட்டி சர்ச்சையாகி வருகிறது.
இறுதி சடங்கு
லாக் டவுன் சமயத்தில் யாராவது உயிரிழந்துவிட்டாலே, துக்க நிகழ்வுகளுக்கு கூட சென்று வர முடியாத சூழல் நிலவுகிறது.. இறுதி சடங்குகள்கூட ஒருசில உறவினர் முன்னிலையில் நடந்து முடிந்து விடும் இந்த இக்கட்டான சூழலில், ஆளும் தரப்பை சேர்ந்த எம்எல்ஏ-வே இப்படி ஊரை அழைத்து விருந்து வைத்து பிறந்த நாள் கொண்டாடலாமா என்ற கேள்வியும் சர்ச்சையும் வெடித்து எழுந்துள்ளது!