பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ்! கர்நாடகாவில் தேவகவுடா கேட்ட 5 தொகுதி இதுதான்! திரும்பும் காங்கிரஸ்!
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன், ஜேடிஎஸ் கட்சி கூட்டணி வைப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவிடம் ஜேடிஎஸ் கட்சி 5 முக்கிய தொகுதிகளை கேட்டுள்ள நிலையில் அதுபற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. காங்கிரஸ் உள்பட மொத்தம் 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. விரைவில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

இந்த ‛இந்தியா' கூட்டணி என்பது பாஜகவுக்கு பெரிய சவாலாக உருவாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பாஜகவின் முயற்சிக்கு செக் வைக்கும் வகையில் இந்த கூட்டணி உள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் வகையில் வியூகங்களை வகுத்து வருகிறது.
அந்த வகையில் கர்நாடகாவில் முன்னாள் பிரதமரான தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. அதேபோல் ஜேடிஎஸ் கட்சியும் செல்வாக்கான தொகுதிகளை காங்கிரஸ் கட்சியிடம் இழந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் சவால் அளிக்கும் வகையில் பாஜக-ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளன.
அதாவது முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஜேடிஎஸ்-பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சிக்கு 5 தொகுதிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட ஜேபி நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோர் தொகுதி பங்கீட்டை பிரதமர் மோடி இறுதி செய்வார் என தெரிவித்துள்ளதாக கூறபப்டுகிறது. இத்தகைய சூழலில் தான் பாஜகவிடம், ஜேடிஎஸ் கட்சி கேட்ட 5 நாடாளுமன்ற தொகுதிகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி மண்டியா, ஹாசன், துமகூரு, சிக்பள்ளாப்பூர், பெங்களூர் புறநகர் உள்ளிட்ட 5 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேவகவுடா தெரிவித்துள்ளார்.
ஜேடிஎஸ் கட்சி என்பது ஒக்கலிகர் மக்கள் வசிக்கும் பழைய மைசூர் பிராந்தியத்தில் செல்வாக்குடன் உள்ளது. ஏனென்றால் ஜேடிஎஸ் கட்சியின் தலைவரான தேவகவுடா ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தற்போது அவர் கேட்டுள்ள 5 தொகுதிகளும் பழைய மைசூர் மாவட்டத்தில் தான் உள்ளது. இங்கு ஜேடிஎஸ் கட்சிக்கு அதிகமான வாக்கு வங்கி உள்ள நிலையில் பாஜகவின் ஓட்டும் கிடைக்கும் பட்சத்தில் எளிதில் தங்கள் வேட்பாளர் வெற்றி பெறலாம் என தேவகவுடா நினைத்துள்ளார்.
அதன்படி தேவகவுடாவின் சொந்த ஊர் உள்ள ஹாசன் தொகுதி மற்றும் பெங்களூர் புறநகர் தொகுதிகள் ஜேடிஎஸ் கட்சிக்கு பிரச்சனையின்றி கிடைக்கலாம் என கூறப்படுகிறது. மாறாக பிற 3 தொகுதிகள் ஜேடிஎஸ் கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் மண்டியா தொகுதியில் தற்போது மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா அம்பரீஷ் சுயேச்சை எம்பியாக இருக்கிறார்.
தற்போது சுமலா அம்பரீஷ் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் அங்கு போட்டியிட தயாராகி வருகிறார். இதனால் மண்டியா தொகுதி ஜேடிஎஸ் கட்சிக்கு கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆனால் மண்டியா என்பது ஜேடிஎஸ் கட்சிக்கு பலம் வாய்ந்த தொகுதியாகும். இதனால் அந்த தொகுதி யாருக்கு கிடைக்கிறது? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதேபோல் சிக்பள்ளாப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் சுதாகர், சிக்கமகளூர் தொகுதியில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதிகளும் கிடைக்குமா? என்பதில் குழப்பம் உள்ளது. இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பாஜக, ஜேடிஎஸ்க்கு எந்தெந்த தொகுதி வழங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications