பெங்களூரில் குறைந்த விலையில் வீட்டுமனைகள்.. மொத்தமாக கோடிகளில் ஏமாந்த சின்னத்திரை நடிகர், நடிகைகள்
பெங்களூர்: கர்நாடக சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வரும் சஞ்சீவ் தகடூர் என்பவர் தனக்கு தெரிந்த கட்டுமான நிறுவனர் மூலம் குறைந்த விலையில் வீட்டுமனை பெற்றுத்தருவதாக சின்னத்திரை நடிகர் சங்கத்தினரிடம் கூறியுள்ளார். இதனை நம்பி 139 பேர் ரூ.1 கோடியே 60 லட்சத்தை பல்வேறு தவணைகளில் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் குறைந்த விலையில் வீட்டுமனைகள் கிடைக்கவில்லை.. மாறாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் மொத்தமாக ஏமாந்துள்ளனர்.
கர்நாடக சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வரும் சஞ்சீவ் தகடூர் என்பவர் சின்னத்திரை நடிகர், நடிகைகளிடம் குறைந்த விலையில் வீட்டு மனை கிடைப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர்களிடம் தனக்கு தெரிந்த கட்டுமான நிறுவனர் மூலம் குறைந்த விலையில் வீட்டுமனை பெற்றுத்தருவதாகவும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் கூறியிருக்கிறார்.

மேலும் சஞ்சீவ் தகடூர் கட்டுமான நிறுவனர் பகீரதா என்பவரை அறிமுகம் செய்து வைத்தாராம். அதன்பேரில் சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 139 பேர் ரூ.1 கோடியே 60 லட்சத்தை பல்வேறு தவணைகளில் கட்டுமான நிறுவனர் பகீரதா மற்றும் சஞ்சீவ் தகடூர் மற்றும் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த குருபிரசாத், ரவீந்திரா, உமாகாந்த் ஆகியோரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட கட்டுமான நிறுவனத்தினர், பெங்களூர் அருகே தாவரகெரேவில் நிலம் வாங்கி இருப்பதாகவும், அதை வீட்டுமனைகளாக பிரித்து கொடுப்பதாகவும் அப்போது நம்பிக்கையாக கூறினார்களாம். இதையடுத்து ராஜராஜேஸ்வரிநகர் துணை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சின்னத்திரை நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் சென்று தங்களுக்கான வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வது குறித்து விசாரித்துள்ளார்கள்.
அப்போது தான் கட்டுமான நிறுவனர் பகீரதா, சஞ்சீவ் தகடூர், குருபிரசாத், ரவீந்திரா மற்றும் உமாகாந்த் ஆகிய 5 பேரும் சேர்ந்து வீட்டுமனை வழங்குவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து சின்னத்திரை நடிகர், நடிகைகள் மற்றும் சங்கத்தினர், பகீரதா உள்பட 5 பேரையும் தொடர்பு கொள்ள முயன்றனர். அப்போது அவர்கள் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. அதையடுத்து பணத்தை கொடுத்து ஏமாந்த நடிகர், நடிகைகள் உள்பட 139 பேரும் ராஜராஜேஸ்வரிநகர் போலீசில் நடந்த சம்பவத்தை விவரமாக கூறி புகார் செய்தனர். அதன்பேரில் பெங்களூர் ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications