கர்நாடகாவில் ஜேடிஎஸ் உடன் கூட்டணி? வந்து விழுந்த கேள்வி.. நாலே வார்த்தையில் கார்கே நறுக் பதில்
பெங்களூர்: கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையலாம் எனக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கர்நாடகாவில் சமீபத்தில் தான் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அங்கே இருக்கும் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கே நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அங்கே பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இடையில் ஓல்ட் மைசூர் உள்ளிட்ட பிராந்தியங்களில் ஜேடிஎஸ் கட்சியும் வலுவாகப் போட்டியைக் கொடுத்தது.
கர்நாடக தேர்தல்: இதில் தேர்தலுக்கு முன்பு வந்த பல கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், அங்கே பாஜக இறுதிக் கட்டத்தில் மிகத் தீவிரமான ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தது. இதற்கிடையே தேர்தலுக்குப் பின் வந்த எக்ஸிட் போல்களில் போட்டி கடுமையாக இருக்கும் என்ற கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பிடித்தாலும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் அதிகம் என்றே அதில் கூறப்பட்டிருந்தது.
அப்படித் தொங்கு சட்டசபை அமைந்தால் மீண்டும் ஜேடிஎஸ் கிங் மேக்கராக உருவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதனிடையே காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளுமே தங்களிடம் ஆதரவே கேட்டதாகக் கூறி ஜேடிஎஸ் தரப்பு பகீர் கிளப்பியது. ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு வரை இரு கட்சிகளுமே ஜேடிஎஸ் உடன் கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
மல்லிகார்ஜுன கார்கே: இந்தச் சூழலில், ஜேடிஎஸ் கட்சியை தாங்கள் எந்த விதத்திலும் அணுகவில்லை என்று காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்கள் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் அமோக வெற்றியைப் பெறும் என்றும் வெல்லும் இடங்களைப் பொறுத்து அடுத்த கட்ட முடிவு குறித்து நாளை தான் முடிவே எடுக்கப்படும் என்றும் காங். தலைவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "எவ்வளவு தொகுதிகளில் வெல்கிறோம் என்பதே நமது அடுத்த கட்ட நகர்வை முடிவு செய்யும்" என்றார். எம்எல்ஏக்கள் கட்சி மாறும் "ஆப்ரேஷன் லோட்டஸ்" குறித்து கேள்வி எழுப்பிய போது, "தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய உடனே அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்.
யாருடன் கூட்டணி வைப்பது என்று முடிவு செய்துவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர். அதெல்லாம் உண்மை இல்லை. நாங்கள் இதுவரை யாருடனும் கூட்டணி குறித்துப் பேச அணுகவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
பல எக்ஸிட் போல் முடிவுகளில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறுகிறது. இருப்பினும், சில எக்ஸிட் போல்கள் தொங்கு சட்டசபை அமையும் என கூறியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பாலான தேர்தல்களில் அங்கே தொங்கு சட்டசபையே அமைந்துள்ளதால் இந்த வாய்ப்பை நம்மால் நிராகரித்துவிட முடியாது.
நம்பிக்கை: அதேநேரம் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் 150 இடங்களில் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மறுபுறம் பாஜகவும் தாங்கள் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்போம் எனத் தெரிவித்து வருகிறது.
இரு கட்சிகளும் இப்படிச் சொன்னாலும் மக்கள் என்ன முடிவு செய்துள்ளனர் என்பது நாளை மதியத்திற்குள் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications