‛‛நானும் போட்டியிடல’’.. சோனியாவை தொடர்ந்து பின்வாங்கும் கார்கே? மருமகனுக்கு வாய்ப்பு கேட்கிறாராம்
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகனுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. சோனியாவை போல் கார்கேவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுப்பதாகவும், இதனால் கர்நாடகாவில் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த தொகுதியான கலபுரகியில் மருமகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக சார்பில் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் என்பது வெளியிடப்படவில்லை. இன்று முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடலாம் என கூறப்படுகிறது. சோனியா காந்தி ராஜ்யசபா எம்பியாகி உள்ளதால் அவர் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. மாறாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பெயர்களுடன் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது வரும் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட விரும்பவில்லை என கூறப்படுகிறது. தற்போது ராஜ்யசபா எம்பியாக அவர் உள்ளார். வரும் தேர்தலில் ‛இந்தியா' கூட்டணி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
இதனால் அவர் தேர்தலில் இருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த தொகுதியான கர்நாடகா மாநிலம் கலபுரிகியில் அவரது மருமகன் ராதாகிருஷ்ணன் தொட்டமணி களமிறங்க உள்ளதாக தவகல்கள் வெளியாகி உள்ளன. இவர் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருவதோடு, தொழிலதிபராக உள்ளார். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதில் ராதாகிருஷ்ணன் தொட்டமணி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் கலபுரகி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலில் ராதாகிருஷ்ணன் தொட்டமணியின் பெயர் முன்னிலையில் உள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஓகே சொல்லும்பட்சத்தில் அவர் கலபுரகியில் போட்டியிடுவது உறுதியாகி விடும். இந்த ஒப்புதலுக்காக ராதாகிருஷ்ணன் தொட்டமணி காத்திருக்கிறார். ஒருவேளை அவர்கள் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் மல்லிகார்ஜுன கார்கேவை மீண்டும் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏனென்றால் ஏற்கனவே சோனியா காந்தி தேர்தல் அரசியலில் இருந்து விலகி உள்ளார். இப்போது மல்லிகார்ஜுன கார்கேவுடன் விலகினால் பாஜகவினர் அதனை வைத்து விமர்சனம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் இந்த விஷயத்தில் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது. இந்த கலபுரகி தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே 2009, 2014 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இருப்பினும் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை காங்கிரஸ் கட்சி வழங்கியதோடு, காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications