ஷாக்.. கர்நாடகாவில் இளைஞர் அடித்துக்கொலை.. பசு பாதுகாவலர்கள் எனக்கூறி வெறிச்செயல்.. என்ன நடந்தது?
பெங்களூர்: விரைவில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் அருகே ராமநகர் பகுதியில் இறைச்சிக்காக மாசு கடத்தி செல்வதாக குற்றம்சாட்டி 5 பேர் கும்பல் 3 பேரை தாக்கியது. இதில் இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு மே 13ம் தேதி வாக்கு எண்ணப்பட உள்ளது.
கர்நாடகாவில் பசுமாடுகள் இறைச்சிக்காக வதைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பாஜக ஆட்சியில் பசு மற்றும் கால்நடை வதைப்புக்கான தடை சட்டம் அமலில் உள்ளது.

ரகசிய தகவல்
இந்நிலையில் தான் ராமநகர் மாவட்டம் சாத்தனூர் போலீஸ் நிலையத்தின் வழியே பசுமாடுகள் இறைச்சிக்காக கடத்தப்படுவதாக ராஷ்ட்ரா ரக்சனா படை என்ற அமைப்பை நடத்தி வரும் புனித் கீரேஹள்ளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புனித் தனது கூட்டாளிகள் 4 பேருடன் வெள்ளிக்கிழமை இரவில் சாத்தனூர் போலீஸ் நிலையத்தின் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார்.

3 பேர் மீது தாக்குதல்
அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. லாரியை தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அதில் 16 மாடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புனித் உள்பட 5 பேரும் சேர்ந்து மாடு கடத்தி வந்ததாக கூறி லாரியில் இருந்த இத்ரேஷ் பாஷா, இர்பான் மற்றும் டிரைவர் சையத் ஜாகீர் ஆகியோரை தாக்கினர். மேலும் பாகிஸ்தான் செல்லும்படி கூறினர்.

வழக்குப்பதிவு
இதற்கிடையே அருகிலேயே போலீஸ் நிலையம் இருந்தததால் உடனடியாக போலீசார் விரைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடினர். போலீசார் சையத் ஜாகீர் பிடித்தனர். மேலும் புனித் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சையத் ஜாகீர் மற்றும் அவரோடு வந்தவர்கள் மீது பசு மற்றும் கால்நடை வதை சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மயங்கி விழுந்து சாவு
மேலும் தலைமறைவானர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் சையத் ஜாகீருடன் வந்த மண்டியா மாவட்டத்தை சேர்ந்த இத்ரேஷ் பாஷா இறந்திருப்பது தெரியவந்தது. அதாவது புனித் உள்ளிட்டவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் போலீசார் வந்தவுடன் அனைவரும் ஓடினர். இந்த வேளையில் தலைமறைவானதாக கருதப்பட்ட இத்ரேஷ் பாஷா மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் இரவில் நடந்த நிலையில் அவர் இறந்தது உடனடியாக தெரியவில்லை.

லாரி டிரைவர் சொல்வது என்ன?
இதற்கிடையே சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் சையத் ஜாகீர் கூறுகையில், ‛‛நாங்கள் வழக்கமாக வார இறுதி நாட்களை கணக்கீட்டு கால்நடைகளை தமிழ்நாடு, கேரளாவில் விற்பனை செய்வோம். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை 16 கால்நடைகளுடன் விற்பனைக்கு புறப்பட்டோம். அப்போது எங்களை வழிமறித்து தாக்கினர். என்னுடன் வந்த இத்ரேஷ் பாஷ், இர்பான் ஆகியோர் போலீசாரை பார்த்தவுடன் தப்பியோடியதாக நினைத்தேன். ஆனால் சனிக்கிழமை காலையில் இத்ரேஷ் பாஷாவின் போட்டோவை போலீசார் என்னிடம் காட்டி அவர் இறந்துவிட்டதாக கூறினர்'' என கண்கலங்கினார்.

கொலை வழக்குப்பதிவு
இதையடுத்து இத்ரேஷ் பாஷ தரப்பில் சையத் ஜாகீர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் புனித் உள்பட 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications