காவிரியின் குறுக்கே மேகதாது அணை- மத்திய அரசின் சுற்றுச் சூழல் அனுமதி பெற கர்நாடகா தீவிர நடவடிக்கை!
பெங்களூர்: காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடகா அரசு தீவிரமாக களமிறங்கி உள்ளது. மேகதாது அணைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு மாற்று இடங்களை ஒதுக்கீடு செய்வதில் கர்நாடகா அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் மத்திய அரசின் சுற்றுச் சூழல் அனுமதியைப் பெறுவதிலும் கர்நாடகா மும்முரமாக இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டிக் கொண்டே வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி கர்நாடகா அரசின் மேகதாது அணை கட்டுமான முயற்சிகள் தொடருகின்றன.

மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ரூ9,000 கோடியில் திட்ட அறிக்கையையும் கர்நாடகா அரசு தயார் செய்துள்ளது. இந்த அணையில் 67.16 டிஎம்சி நீர் தேக்க முடியும் என்கிறது கர்நாடகா. பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காகவே இந்த அணை கட்டப்படுகிறது; தமிழ்நாட்டுக்கான நீர் பகிர்வுக்கு எந்த பிரச்சனையும் வராது என்பதும் கர்நாடகாவின் விளக்கம். ஆனால் உரிய நீர் பகிர்வை கர்நாடகா ஒருபோதும் திறந்துவிட்டதே கிடையாது என்பதால் இந்த புதிய அணைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இருந்தபோதும் டெல்லி செல்லும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடியை சந்திக்கும் போது மேகதாது அணை கட்ட வலியுறுத்தி வருகிறார். அதேபோல பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நிறுவனரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இருந்த போதும் இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் இன்னமும் அனுமதி தரவில்லை. 5,000 ஏக்கர் வனப் பகுதியை அழித்து மேகதாது அணை கட்டுவதாலேயே மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி தராமல் இருந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, மேகதாது அணைக்காக 5,096 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயார் செய்துள்ளதாம். இந்த திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய 233 குடும்பங்களுக்கான மாற்று இடங்களையும் கர்நாடகா அரசு தேர்வு செய்துவிட்டதாம். அதேபோல வனப்பகுதியை அழிப்பதால் வனத்துறைக்கு மாற்று இடம் வழங்குவதற்கான பகுதியையும் கூட கர்நாடகா அரசு தேர்வு செய்து மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இந்த தீவிரமான நடவடிக்கைகளால் மத்திய அரசு அனுமதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறதாம் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு.












Click it and Unblock the Notifications