பிரதமர் மோடியை நோக்கி செல்போன் வீசப்பட்ட விவகாரம்.. நடந்தது இதுதான்.. கர்நாடக போலீஸ் விளக்கம்
பெங்களூர்: கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் மீது கூட்டத்தில் இருந்து திடீரேன செல்போன் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து கர்நாடக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்களை வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் பாஜக 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் 223 தொகுதிகளில் ஜனதா தளம் (எஸ்) 211 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, வீடாக சென்று வாக்கு சேகரிப்பது என்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.
நேற்று கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா,பேளூரு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் மைசூரு மாவட்டத்தில் திறந்த வாகனத்தில் நின்ற படி 5 கிலோ மீட்டருக்கு பிரதமர் மோடி பேரணியாக சென்றார்.
மைசூருவில் ஜம்பு சவாரி பகுதியில் திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது சாலையின் இரு பக்கத்திலும் நின்ற பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடியை பார்த்த உற்சாகத்தில் பூக்களை தூவினர். பிரதமர் மோடியும் தொண்டர்களை பார்த்து சிரித்தவாறே கைகளை அசைத்தபடி சென்றார்.
மோடியின் வாகனம் மைசூரு டவுன் சிக்ககடியாலா பகுதியில் சென்றபோது கூட்டத்தில் இருந்து திடீரேன பிரதமர் மோடியை நோக்கிசெல்போன் வீசப்பட்டது. அந்த செல்போன் பிரதமர் மோடியின் வாகனத்தின் மீது விழுந்தது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்து வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு படையினரும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பிரதமர் மோடிக்கு ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அவரை நோக்கி செல்போன் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக மைசூரு போலீசார், செல்போன் வீசியது யார் என்று சல்லடை போட்டு தேட துவங்கினர். இதையடுத்து செல்போனை வீசியது யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில ஏடிஜிபி அலோக் குமார் கூறியதாவது:-
பிரதமர் மோடிக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு உள்ளது. பிரதமர் மோடியின் வாகனத்தில் செல்போனை விசியவரை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். பாஜகவை சேர்ந்த அவருக்கு எந்த தீய எண்ணமும் இல்லை. பிரதமரை பார்த்த உற்சாக மிகுதியில் அவர் செல்போனை வீசிவிட்டார். எஸ்.பி.ஜி அதிகாரிகள் செல்போனை அந்த நபரிடம் ஒப்படைத்தனர்" என்று கூறியுள்ளார்.
எனினும் இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு செல்போனை வீசிய நபரை போலீசார் அழைத்துள்ளனர். அவரிடம் செல்போன் வீசியது தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications