ஆளுநர் கொடுத்த அனுமதி என்னவாகும்? சித்தராமையா மனு மீது இன்றும் கர்நாடகா ஹைகோர்ட்டில் விசாரணை!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. ஆளுநர் கெலாட்டுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் இன்று அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறவடையக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.
கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மூடா என்கிற மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த வீட்டு மனைகள் ஒதுக்கீடு சட்டவிரோதமானது; முறைகேடானது என்பது பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால் இதனை சித்தராமையா திட்டவட்டமாக நிராகரித்து விளக்கம் அளித்தும் வருகிறார்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா ஆகியோர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் கெலாட்டுக்கு எதிராக கர்நாடகா அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றியது. அதேநேரத்தில் ஆளுநர் கெலாட் அனுமதிக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கும் தொடர்ந்தார்.
இன்னொரு பக்கம், மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையாவின் மனு மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து இன்றும் விசாரணை நடைபெற உள்ளது. முதல்வர் சித்தராமையா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடுகிறார். இன்றைய விசாரணையின் முடிவில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா ஒத்திவைக்கக் கூடும் என தெரிகிறது. இந்த வழக்கில் அடுத்த சில நாட்களிலேயே கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கக் கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது












Click it and Unblock the Notifications