பெங்களூர் ஐஐஎஸ்சி தீவிரவாத தாக்குதல் வழக்கு.. ஆதாரம் தராத போலீஸ்.."உபா" சட்டத்தில் கைதானவர் விடுதலை
பெங்களூர்: பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 2005ம் ஆண்டு நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் தொடர்புள்ளவர் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டவர் 4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு, ஆதாரம் இல்லை என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ளது இந்திய அறிவியல் கழகம் (IISc). சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆய்வு அமைப்பு இதுவாகும்.
2005 டிசம்பர் 28ம் தேதி பெங்களூர், இந்திய அறிவியல் கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டின்போது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த (ஐஐடி) ஓய்வுபெற்ற பேராசிரியர் பூரி உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, 2008 ஆம் ஆண்டில் சபாஹுதீன் என்பவர் லக்னோ காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், 2017 ஆம் ஆண்டில், திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில், கைது செய்யப்பட்டவர் முகமது ஹபீப்.
இந்த வழக்கு பெங்களூர் தேசிய பாதுகாப்பு முகமை வழக்குகளுக்கான, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை காவல்துறையால், முகமது ஹபீப் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை திரட்ட முடியவில்லை என்று கூறி, நீதிபதி கசனப்ப நாயக் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தார்.
டெல்லி கலவரம்.. ஜேஎன்யூ மாணவர் சர்ஜீல் இமாம் உபா சட்டத்தின் கீழ் கைது.. தேச துரோக வழக்கு!
"குற்றம் சாட்டப்பட்ட ஹபீப் மீது 120-பி, 121, 121-ஏ, 122 பிரிவுகளின் கீழோ, ஐபிசியின் 123, 307, 302, இந்திய ஆயுதச் சட்டத்தின் 25, 27 பிரிவுகள், வெடி பொருட்கள் சட்டத்தின் 3, 4, 5 மற்றும் 6 பிரிவுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு (UAPA)ன் 10, 13, 16, 17,18 மற்றும் 20 பிரிவுகள் ஆகியவற்றின்கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவர் ஏன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை" என்று தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஹபீபுக்காக ஆஜரான வக்கீல் முகமது தாஹிர் முன்னதாக தனது வாதத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் குறித்து குற்றப்பத்திரிகையில் போலீசார் எதுவும் கூறவில்லை என்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சம்பவம் அல்லது குற்றம் குறித்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனித்துவமான தொடர்பு இருப்பதைக் காட்டும் எந்த ஆதாரமும் சேகரிக்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட நம்பர் 1 (சபாஹுதீன் ) தனது வாக்குமூலத்தை 29.03.2008 அன்று வழங்கியதாகக் கூறப்படுகிறது, இது சுமார் 35 பக்கங்களைக் கொண்டுள்ளது, அதில் அவர் பல சம்பவங்களை விவரித்துள்ளார், மேலும் 2005ல், அவர் திரிபுராவின் அகர்த்தலாவிற்குச் சென்று, ஹபீப் மியாவை (இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்) சந்தித்து, சட்டவிரோதமாக நாட்டு எல்லையை கடக்க அவரது உதவியை நாடுவதற்காகவும், அவரது உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தாமல் பங்களாதேஷுக்கு தப்பவும் அவருடன் நட்பு கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி தனது வாக்குமூலத்தில் பல நபர்களின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார். காவல்துறையினர் நீண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தாலும், முகமது ஹபீப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஒரு ஆதாரம் கூட சமர்ப்பிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எந்தவொரு குற்றமும் செய்யாமலும் அல்லது குற்றம் குறித்து எந்த விரமும் இல்லாமல் சிறையில் தவிக்கிறார்" என்று வாதிடப்பட்டது.