கர்நாடக அரசியலில் இருந்து எடியூரப்பாவை ஓரம்கட்டுகிறதா பாஜக? அவரே சொன்ன பதில் இதுதான்!
பெங்களூர்: "என்னை யாரும் வீழ்த்த முடியாது.. யாரும் என்னை ஓரங்கட்டவில்லை" என்று பாஜக மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பா பேசினார்.
பாஜகவில் இருந்து எடியூரப்பா ஓரங்கட்டப்படுவதாகவும், கட்சித் தலைமையால் அவர் புறக்கணிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேபோல, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மையும், எடியூரப்பாதான் எப்போதும் எங்களின் தலைவர் எனக் கூறியுள்ளார்.

கொடி பறக்க காரணம்
வட இந்தியாவில் அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவால் தென் மாநிலங்களில் காலூன்ற முடியாமல் உள்ளது. எனினும், தென் மாநிலங்களில் கர்நாடகா மட்டுமே பாஜகவை ஏற்றுக் கொண்டுள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் கொடி பறப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் எடியூரப்பா மட்டுமே. இது பாஜக தலைமைக்கு நன்றாக தெரியும். அதனால்தான், பல்வேறு ஊழல் முறைகேடுகளில் எடியூரப்பா சிக்கிய போதும் பாஜக அவரை கைவிடவில்லை. இதனிடையே, எடியூரப்பாவுக்கு 78 வயது நிறைவடைந்ததால் கட்சி விதிப்படி அவர் கர்நாடகா முதல்வர் பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார்.

ஓரங்கட்டப்படும் எடியூரப்பா
இதன் தொடர்ச்சியாக, கர்நாடகா முதல்வராக பசவராஜ் பதவியேற்றார். எடியூரப்பாவுக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையே பல ஆண்டுகளாகவே மனக்கசப்பு இருப்பதால், எடியூரப்பாக தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின. அதை மெய்ப்பிக்கும் விதமாக, பாஜக பொதுக்கூட்டங்களிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் எடியூரப்பாவை கடந்த சில மாதங்களாக பார்க்க முடியவில்லை. இதனால் அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தனம் ஆகியுள்ளதாக கர்நாடகா பத்திரிகைகள் எழுதி வந்தன.

"என்னை யாராலும் வீழ்த்த முடியாது"
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் கோப்பலில் பாஜக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்ற இந்நகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், "நீங்கள் பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக நினைக்கிறீர்களா?" எனக் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த எடியூரப்பா, "இது முற்றிலும் பொய்யான செய்தி. பாஜகவில் இருந்து யாரும் ஓரங்கட்டவில்லை. ஓரங்கட்டவும் முடியாது. யாராலும் யாரையும் வீழ்த்த முடியாது. என்னையும் யாராலும் வீழ்த்த முடியாது.

"பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்"
எனக்கென தனி வலிமை இருக்கிறது. கர்நாடகாவில் பாஜகவை வலிமைப்படுத்தி, ஆட்சிக்கு கொண்டு வந்ததே நான் தான். இதை கர்நாடகா மாநிலமே அறியும். கர்நாடகாவில் பாஜக ஒற்றுமையாக உள்ளது. மீண்டும் நாங்கள் தான் கர்நாடகாவில் ஆட்சிக்கு வருவோம். அதற்கு மக்களின் ஆசிர்வாதம் தேவை. எனக்கு முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அதிகாரத்தில் எனக்கு விருப்பமும் கிடையாது. பாஜகவை மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியில் அமர்த்த வேண்டும். அதுவே எனது விருப்பம்" என எடியூரப்பா கூறினார்.












Click it and Unblock the Notifications