‛ஆபாச வீடியோ’ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா கைது.. நள்ளிரவில் பெங்களூர் ஏர்போர்ட்டில் தூக்கிய போலீஸ்
பெங்களூர்: 300க்கும் அதிகமான பெண்களை ஆசைக்கு இணங்க வைத்து 3,000 ஆபாச வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஜெர்மனியில் இருந்து விமானத்தில் பெங்களூர் வந்திறங்கியவரை விமான நிலையத்தில் வைத்து எஸ்ஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஹாசன் தொகுதி ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணியில் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 26-ந் தேதி ஹாசன் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. பிரஜ்வல் ரேவண்ணா ஓட்டளித்தார். அதன்பிறகு அவர் ரகசியமாக ஜெர்மனிக்கு பறந்தார்.

அதாவது பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் பரவிய நிலையில் அவர் வெளிநாடு சென்றார். சுமார் 300க்கும் அதிகமான பெண்களை கட்டாயப்படுத்தி அவர் ஆசைக்கு இணங்க வைத்து ஆபாச வீடியோ கால் பேசியுள்ளார். அதோடு சில பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதோடு இந்த செயல்களை எல்லாம் அவர் வீடியோவாக பென்டிரைவில் சேமித்து வைத்திருந்தார். இந்த பென்டிரைவ் வீடியோக்கள் தான் வெளியாகி கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியது.
இதுதொடர்பாக கர்நாடகா அரசு எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன் அனுப்பியது. சம்மன் அவரது வீட்டில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா மே 31ம் தேதி பெங்களூர் திரும்புவதாகவும், எஸ்ஐடி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையே தான் எஸ்ஐடி போலீசாரின் கைது நடவடிக்கையில் தப்ப அவர் முன்ஜாமீன் கோரினார். ஆனால் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் பெங்களூர் வந்திறங்கியவுடன் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அதன்படி நள்ளிரவு 1 மணியளவில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து விமானத்தில் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
உடனடியாக அங்கு இருந்த எஸ்ஐடி போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் சிஐடி அலுவலகத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இன்றைய தினம் பிரஜ்வல் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் எஸ்ஐடி போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையான ரேவண்ணா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். கைதுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications