விராட் கோலி தொடங்கிய பெங்களூர் ரெஸ்டாரண்ட் மூடல்.. வாடகை பாக்கியால் வந்த சோதனை
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க பேட்ஸ்மேனுமான விராட் கோலி இணை உரிமையாளராக இருந்த 'ஒன்8 கம்யூன்' என்ற ரெஸ்டாரண்ட் பெங்களூரில் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தின் அருகே அமைந்து இருக்கும் இந்த ரெஸ்டாரண்ட் மூடப்பட்டதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தை சுற்றி ஏராளமான ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் உள்ளன. அதில் ஒன்று தான் 'ஒன்8 கம்யூன்' ரெஸ்டாரண்ட். இந்த ரெஸ்டாரண்ட்டின் இணை உரிமையாளராக விராட் கோலி செயல்பட்டு வந்தார்.

விராட் கோலி தனது கிரிக்கெட் வீரராக இருந்தாலும் கூட சொந்தமாக தொழில்கள் செய்து வருகிறார். அந்த வகையில் பல்வேறு நகரங்களில் ஹோட்டல்களை வைத்துள்ளார்.
விராட் கோலியின் 'பிராண்ட்'
விராட் கோலி 'ஒன்8 கம்யூன்' என்ற பெயரில் ரெஸ்டாரண்ட்டுகளை நடத்தி வருகிறார். விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18யை குறிக்கும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை விராட் கோலி தனது நபண்பர் வர்திக் திஹாரா உடன் சேர்ந்து நடத்தி வருகிறார். டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இந்த ரெஸ்டாரண்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன.
2023ல் பெங்களூரில் ரெஸ்டாரண்ட்
அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டில் பெங்களூரில் விராட் கோலி இணை உரிமையாளராக இருக்க'ஒன்8 கம்யூன்' என்ற ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டது. இந்த ரெஸ்டாரண்ட் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதையடுத்து விராட் கோலி இணை உரிமையாளர் பொறுப்பில் இருந்து விலகினார். மேலும் அவரது பிராண்ட் பெயரை விலக்கி கொண்டார். இப்போது விராட் கோலிக்கும், அந்த ரெஸ்டாரண்ட்க்கும் தொடர்பு இல்லை.
பெங்களூர் ரெஸ்டாரண்ட் மூடல்
இப்படியான சூழலில் தான், தற்போது அந்த ரெஸ்டாரண்ட் இழுத்து மூடப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டாரண்ட்டுக்கு ரூ.2 கோடி வரை வாடகை பாக்கி உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசரித்த நீதிமன்றம் ரெஸ்டாரண்ட்டை மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து 'ஒன்8 கம்யூன்' ஹோட்டல் மூடப்பட்டுள்ளது.
மூடப்பட்ட இந்த ரெஸ்டாரண்ட் தற்போது ட்ரியோ ஹில்ஸ் ஹாஸ்பிடாலிட்டி (Trio Hills Hospitality) எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களாக அந்த நிறுவனம் வாடகை, பராமரிப்புக் கட்டணம் மற்றும் வருவாய் பங்கை முறையாக கட்டட உரிமையாளருக்கு வழங்கவில்லை. இதையடுத்து அந்த ரெஸ்டாரண்ட் இருக்கும் கட்டடத்தின் உரிமையாளர் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் ரெஸ்டாரண்ட் நடத்தும் நிறுவனம் தனக்கான நிலுவை தொகைகளை செலுத்தும் வரை ரெஸ்டாரண்ட்டை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரெஸ்டாரண்ட்டை மூட உத்தரவிட்டது. அதன்படி தற்போது ரெஸ்டாரண்ட் மூடப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டாரண்ட் இப்படி சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறையல்ல.
முந்தைய சர்ச்சைகள்
இதற்கு முன்பும் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. விதிகளை முறையாக பின்பற்றுவது இல்லை என பெங்களூர் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவதுரெஸ்டாரண்ட்டில் புகைப்பிடிக்கும் நபர்களுக்காக தனி இடம் வழங்காதது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (COTPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதவிர தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் (NOC) உள்ளிட்ட கட்டாய அனுமதிகள் இன்றி ஹோட்டல் இயங்கியதாகவும் பெங்களூர் மாநகராட்சி அறிவித்தது. அதுதொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த தொடர் சர்ச்சைகளால் விராட் கோலி அந்த ரெஸ்டாரண்ட் நிர்வாகத்தில் இருந்து விலகினார். விராட் கோலி விலகிய பிறகு அந்த ரெஸ்டாரண்ட் செல்லும் வாடிக்கையாளர்கள் குறைந்தன. இதனால் இழப்புகள் ஏற்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications