"ஐ".. மரு வச்சு ஆளே மாறிட்டாரு பாருங்க எடியூரப்பா.. எல்லாம் பதவி படுத்தும் பாடுங்க!
Recommended Video
பெங்களூர்: கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 4-ஆவது முறையாக எந்த இடையூறுமின்றி முதல்வராக, தனது பெயரின் ஸ்பெல்லிங்கை மாற்றி அமைத்துக் கொண்டார்.
கர்நாடகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 10 முதல்வர்களை அந்த மாநிலம் சந்தித்துள்ளது. அதாவது இங்கு பெரும்பாலான முதல்வர்கள் தங்கள் பதவியை முழுவதும் முடித்ததில்லை. அந்த வகையில் மூன்று முறை முதல்வராக இருந்த எடியூரப்பாவும் தனது 5 ஆண்டுகள் பதவிகாலத்தை முழுவதுமாக முடித்ததில்லை.
கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றார். அப்போது முதல் 20 மாதங்கள் வரை மட்டுமே ஜேடிஎஸ் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.
ஆட்சி
இந்த நிலையில் 20 மாதங்கள் கழித்து ஆட்சியை ஒப்படைக்குமாறு பாஜக கேட்ட போது அதற்கு குமாரசாமி மறுத்துவிட்டார். இதனால் விரக்தி அடைந்த எடியூரப்பா ஒரு ஜோசியரை சந்தித்தார். அப்போது அவரது ஆலோசனையின் பேரில் தனது பெயரில் உள்ள ஐ என்ற எழுத்தை எடுத்துவிட்டு இரு டி போட்டு ஐ-க்கு பதில் ஒய்யை இணைத்து கொண்டார். (Yediyurappa வை Yeddyurappa என மாற்றிக் கொண்டார்).
7 நாட்கள்
இரு "டி" போட்டால் எதிர்மறை விளைவுகளை நீக்கிவிடும் என நம்பினார். இதையடுத்து கடந்த 2007-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி முதல்முறையாக பாஜக மூத்த தலைவரும் ஷிகாரிபுராவின் எம்எல்ஏவாகவும் இருந்த பிஎஸ் எடியூரப்பா பதவியேற்றார். இதன் மூலம் தென்னிந்தியாவில் முதல் முறையாக பாஜக கால் பதிப்பிற்கு காரணமாகினார். எனினும் பாஜக ஆட்சி கவிழ்ந்ததால் வெறும் 7 நாட்கள் மட்டுமே அவர் அப்பதவியில் நீடித்தார்.
சதானந்த கவுடா
பின்னர் 191- நாட்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சி நீடித்தது. இதையடுத்து 2008-ஆம் ஆண்டு மீண்டும் முதல்வராக இரண்டாவது முறையாக எடியூரப்பா பொறுப்பேற்றார். ஆனால் அந்த முறையும் அவர் 66 நாட்களுக்கு மட்டுமே முதல்வராக தொடர்ந்தார். பின்னர் சதானந்த கௌடா முதல்வரானார்.
மீண்டும் முதல்வர்
இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் அதே ஷிகாரிபுராவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எடியூரப்பா. அந்த தேர்தலில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. யாரும் பெரும்பான்மையை பிடிக்காவிட்டாலும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
பாஜக ஆட்சி
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி முதல்வராக எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே ஜேடிஎஸ்- காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே எடியூரப்பா வெறும் 6 நாட்கள் மட்டுமே முதல்வர் பதவியில் நீடித்தார். பின்னர் பாஜக ஆட்சி கவிழ்ந்தது.
கவிழ்ப்பு
இதையடுத்து ஜேடிஎஸ் - காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதல்வரானார். சுமார் 61 நாட்கள் நீடித்து வந்த நிலையில் 15 காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து நேற்று முன் தினம் ஆட்சியை இழந்தது.
பெயர் மாற்றம்
இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீண்டும் முதல்வராகலாம் என தெரிகிறது. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் ஒரு ஜோதிடரை சந்தித்து பழைய படி தனது பெயரை Yediyurappa என மாற்றிக் கொண்டார்.
ஒரு எழுத்து நீக்கம்
பாஜக லெட்டர் பேடிலும் தனது ஸ்பெல்லிங்கை எடியூரப்பா மாற்றிக் கொண்டார். அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்திலும் இவ்வாறே பெயரை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில் Yeddyurappa என்ற ஸ்பெல்லிங் அவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவில்லை. மூன்று முறை முதல்வராக இருந்தபோது அவர் ஒரு முறை கூட தனது பதவிக்காலத்தை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. எனவே ஜோதிடரை அணுகி ஒய்-க்கு பதில் ஐ-யும் ஒரு "டி" கட் செய்தும் கொண்டுள்ளார் என்றனர் தலைவர்கள்.