பெங்களூர், ஹைதராபாத், டெல்லியில் பஸ், ஆட்டோக்கள் இயக்கம் துவங்கியது.. பயணிகள்தான் இல்லை
பெங்களூர்: பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகா முழுவதும் இன்று, பஸ், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து துவங்கி உள்ளது. ஆனால் போதிய அளவுக்கு பயணிகள் இல்லாமல் அவை அனைத்தும் காலியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
நேற்று திங்கள்கிழமை முதல் மே 31-ஆம் தேதி வரை நான்காவது கட்ட லாக்டவுன் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது.
அந்தந்த பகுதிகளின் நிலவரத்தை பொறுத்து மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு உத்தரவு பிறப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
ஆன்லைன் புக்கிங்.. தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஆம்னி பேருந்து முன்பதிவு.. எப்போது பேருந்துகள் இயங்கும்?
எடியூரப்பா
இந்த நிலையில்தான், நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடியூரப்பா, கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை முதல், பஸ், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்கும், சலூன் கடைகள் திறக்கப்படும், மால்கள், தியேட்டர்கள் தவிர்த்து பிற அனைத்து வகை வணிக நிறுவனங்களும் செயல்படும் என்று அறிவித்தார்.
பெங்களூர் ஆட்டோக்கள்
இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவில் அனைத்து பகுதிகளிலும் இன்று அரசு பஸ்கள் குறைந்த அளவுக்கு இயங்க ஆரம்பித்தன. ஆட்டோ டிரைவர்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு வந்து காத்திருந்தனர். ஆனால் பஸ்கள் காலியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
வாடிக்கையாளர்கள்
ஆட்டோக்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை. இதுபற்றி பெங்களூர் மெஜஸ்டிக் இப்பகுதியில் ஒரு ஆட்டோ டிரைவர் கூறுகையில், காலை 7 மணிக்கு இங்கே வந்தேன். ஒரு பக்கம் ரயில் நிலையம், இன்னொரு பக்கம் பஸ் நிலையம் இருந்தும்கூட, காலை 10.30 மணி வரை ஒரு பயணி கூட வரவில்லை.
பயம்
மக்கள் வெளியே வருவதற்கு பயப்படும் நிலைதான் உள்ளது. பிழைப்புக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. இவ்வாறு அந்த ஆட்டோ டிரைவர் தெரிவித்தார். பஸ் நிலையங்களில் இருந்து வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்றாலும் கூட, வேறு பகுதிகளிலிருந்து பஸ் நிலையங்களுக்கு வருவோர் மிக மிகக் குறைந்த அளவுக்கே உள்ளனர்.
ஹைதராபாத், டெல்லி
ஒருவேளை, இன்று மாலை, அல்லது நாளை முதல், ஓரளவுக்கு நிலைமை சீராக கூடும். அல்லது அச்சத்தின் காரணமாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கக்கூடும் என்பதையும் மறுக்க முடியாது. ஹைதராபாத், மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலும் பொதுப் போக்குவரத்து இன்று துவங்கியுள்ளது.