எதிர்க்கட்சி தலைவர் அசோக்.. கர்நாடகா ரிசல்ட் வந்து 6 மாதங்கள் கழித்து ஒருவழியாக தேர்வு செய்தது பாஜக!
பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜக எம்எல்ஏ ஆர்.அஷோக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்து 6 மாதங்கள் கழித்து எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளது பாஜக.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகின. இந்த தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களைக் கைப்பற்றியது. கர்நாடக முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்து 6 மாதங்களாகியும் எதிர்க்கட்சித் தலைவர் நியமிக்கப்படவில்லை. அமமநில பாஜகவில் எழுந்த குழப்பங்களால் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இல்லாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடர்கள் நடைபெற்று வந்தன.
கர்நாடகா சட்டசபை குளிர்கால கூட்டம் பெலகாவியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடருக்குள் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை டெல்லி மேலிடம் அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம் என பாஜக எம்.எல்.ஏக்களே அறிவித்தனர். இதையடுத்து மேலிடம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில், கர்நாடக மாநில பாஜக தலைவர் அண்மையில் நியமிக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, கர்நாடக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பெங்களூரில் இன்று, கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற பாஜக கட்சித் தலைவராக ஆர்.அசோக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளிவந்து 6 மாதங்கள் கடந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை பாஜக தேர்வு செய்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ ஆர்.அசோக், வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications