14 கிலோ தங்கத்துடன் பெங்களூரில் பிடிபட்ட.. நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு ஜாமீனில் வர முடியாத சிறை
பெங்களூர்: பிரபல நடிகையும் கர்நாடக முன்னாள் டிஜிபியின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ், கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த போது கையும் களவுமாக சிக்கினார். மத்திய அரசின் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ரன்யா ராவை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரன்யா ராவுக்கு ஓராண்டு பிணையின்றி கடுங்காவல் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ், கன்னடத்தில் மானிக்யா, பட்டாக்கி ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் கர்நாடகாவின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் ஆவார்.

17.29 கோடி நகைகள், பணம்
ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் துபாய் சென்று விட்டு திரும்பிய போது, விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14.80 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.12 கோடியாகும். அடிக்கடி துபாய் சென்று வந்ததால் அவர் மீது நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு சந்தேகம் வலுத்த நிலையில், ரன்யா ராவை பொறிவைத்து பிடித்தனர்.
ரன்யா ராவின் வீட்டில் நடத்திய சோதனையில் 4.75 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என ஒட்டு மொத்தமாக ரூ.17.29 கோடிக்கு நகைகள், பணம் மீட்கப்பட்டிருந்தது. அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, தங்கம் கடத்தல் வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டதாகவும், தனக்கு பின்னால் தொழில்அதிபர், ஓட்டல் உரிமையாளர், அரசியல் பிரமுகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு
அவர் கொடுத்த தகவலின் காரணமாக பெங்களூர் தொழில் அதிபர் தருண் என்பவர் கைது செய்யப்பட்டார். ரன்யா மீதான வழக்கில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றதால் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. ரன்யா ராவின் ரூ.34.12 கோடி சொத்துகளை அண்மையில் அமலாக்கத்துறை முடக்கியது . சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவரது சொத்துகள் முடக்கம் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
விக்டோரியா லேஅவுட்டில் உள்ள வீடு, அர்காவதி லேஅவுட்டில் உள்ள நிலம், தும்கூரில் ஒரு தொழில்துறை நிலம் மற்றும் ஆனேகலில் உள்ள விவசாய நிலம் உள்ளிட்ட ரன்யா ராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் (COFEPOSA) கீழ் மற்றொரு வழக்கிலும் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு இருந்தர்.
ஜாமீன் வழங்க மறுப்பு
இந்நிலையில், அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள ஆலோசனை வாரியம்( Advisory Board) ரன்யாவிற்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தண்டனைக் காலம் முழுவதும் ஜாமின் கோர முடியாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ரன்யாவின் ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டன. பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் மார்ச் 14-ம் தேதியும், செஷன்ஸ் நீதிமன்றம் மார்ச் 27-ம் தேதியும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஏப்ரல் 26-ம் தேதியும் ஜாமீன் வழங்க மறுத்தன. இந்த நிலையில்தான் ரன்யா ராவிற்கு ஓராண்டு பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications