அடுத்த அதிரடி.. கார் பின் இருக்கையில் அமருவோர் சீட் பெல்ட் அணியாவிட்டால் 1000 அபராதம்..கர்நாடகாவில்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் காரில் பயணிக்கும்போது பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போருக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இதில் பெரும்பாலான விபத்துகள் என்பது விதிமீறல்களால் தான் நடக்கின்றன.
இதனால் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் பலரும் இன்னும் விதிகளை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

சைரஸ் மிஸ்ட்ரி மரணம்
இதற்கிடையே தான் கடந்த ஜூலை மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து மும்பை நோக்கி சொகுசு காரில் 'டாடா சன்ஸ்' தலைவராக இருந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்ட்ரி (வயது 54) சென்றார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே பல்கர் எனும் இடத்தில் பால தடுப்புச்சுவரில் கார் மோதியது. இதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்ட்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் சீட் பெல்ட் போடாமல் இருந்தது தான் அவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.

கர்நாடகாவில் அதிரடி உத்தரவு
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியது. அதோடு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் 19ல் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது கர்நாடகாவில் அதிரடியாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீட் பெல்ட் கட்டாயம்
அதன்படி கர்நாடகாவில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் நபர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதனை மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மாநிலத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக சாலை பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபியான ஆர் ஹிதேந்திரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரவில் இருப்பது என்ன?
அதில், ‛‛காரில் பின் இருக்கையில் பயணிப்போர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்க வேண்டும். சீட் பெல்ட் அணிவது என்பது உயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் முக்கியமானது. இதனால் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செப்டம்பர் 19ல் எழுதிய கடிதத்தை மேற்கொள் காட்டியுள்ளார்.

தினமும் 31 பேர் பலி
கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை தினமும் சராசரியாக 31 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். அதன்படி இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 7,634 பேர் இறந்துள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக பெலவாகி, பெங்களூர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பலிகள் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications