குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000.. திட்டத்தை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி! மைசூரில் பிரமாண்ட கூட்டம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திட்டத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி வைத்திருக்கிறார்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் 5 முக்கியமான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்கிற வாக்குறுதியும் ஒன்று. தமிழ்நாட்டில்தான் இதுபோன்ற திட்டத்தை திமுக தேர்தலை சந்தித்தபோது அறிவித்தது. தேர்தலில் வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிதான் 'தகுதி' உடைய குடும்ப தலைவிகளின் அக்கவுண்ட்டுக்கு ரூ.1,000 அனுப்பப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு முன்னதாக கர்நாடகாவில் இந்த திட்டம் இன்று அமல்படுத்தப்படுகிறது. தற்போது வரை இந்த திட்டத்தில் 1.08 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக ரூ.17,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கிரகலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று மைசூரில் நடைபெறுகிறது. திட்டத்தை தொடங்கி வைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, ராகுல் காந்தி எம்பி உள்ளிட்டோர் கர்நாடகா வந்திருக்கின்றனர்.
மாநில அளவில் இவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க மாவட்ட அளவில் அந்தந்த பொறுப்பு அமைச்சர்கள், தாலுகா அளவில் எம்எல்ஏக்கள் திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். இன்று மைசூரில் நடைபெறும் இந்த தொடக்க நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா சாவா போராட்டம் போன்றதாகும். ஏனெனில் கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இந்த காலத்தில் ஏராளமான கசப்பான சம்பவங்கள் கட்சிக்குள்ளும் வெளியேயும் நடந்திருக்கிறது. குலாம் நபி ஆசாத் போன்ற முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியது, கேப்டன் அம்ரீந்தர் சிங் போன்றோர் கட்சி தாவியது, பஞ்சாபிலும், டெல்லி உள்ளாட்சியிலும் ஆட்சியை இழந்தது, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு, நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கு நெருக்கடி என கட்சி படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே இந்த முறை எப்படியாவது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என்று கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. வெற்றிக்கு மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியம் என்பதால் அதனை பெற, தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது காங்கிரஸ். தேர்தலின் போது காங்கிரஸ் 5 முக்கியமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தது.
ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் தலா 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஊக்கத்தொகை, ரேஷன் அட்டை குடும்பதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் தலா, ரூ.3,000 மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு தலா ரூ.1,500 ஊக்கத்தொகை, அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், ஆகியவைதான் இந்த 5 வாக்குறுதிகள். இந்நிலையில் இன்று குடும்ப தலைவிகளுக்கான ரூ.2,000 திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் திட்டங்களில் பெரும்பாலானவை பெண்களுக்கானது என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "காங்கிரஸ் தலைவர் ஏதாவது சொன்னால் அதை நிச்சயம் செய்து காட்டுவார்கள். நாங்கள் கொடுத்த 5 வாக்குறுதியை பாருங்கள். இதில் 4 வாக்குறுதிகள் பெண்களுக்கானவை. ஆனால் இதெயெல்லாம் செய்ய வேண்டிய மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்கான வேலையை செய்கிறது. அவர்கள் ஏழைகளுக்கும், சாமானியனுக்கும் உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications