ஒரே நேரத்தில் 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! அரண்டு போன போலீஸ்.. பெங்களூரில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் 68 பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பெங்களூர் முழுவதும் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
பெங்களூரின் மற்ற அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிகளை போலவே யெலஹங்கா மற்றும் பசவேஸ்வரா நகரில் உள்ள தனியார் பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே மாணவர்கள் சரசரவென வரத்தொடங்கினர். பள்ளியின் அலுவலர்கள் கம்யூட்டர்களை ஆன் செய்து மெயில்களை செக் செய்ய தொடங்கினர். அதற்குள் வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால் அதன் பின்னர்தான் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதே தெரிய வந்தது.

உடனடியாக பள்ளி நிர்வாகம் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் மாணவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனால் பள்ளியின் வாசல்களில் பெற்றோர்கள் குவிந்தனர். தொடக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிய வந்தது. ஆனால் நேரம் போக போக 68 பள்ளிகளுக்கு மிரட்டல் மெயில் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் பெங்களூர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா கூறுகையில், "இன்று காலை பள்ளியின் ஊழியர்கள் வழக்கம் போல பள்ளியின் மின்னஞ்சலை ஓபன் செய்திருக்கிறார்கள். அப்போதுதான் இந்த மிரட்டல் விவகாரம் வெளியில் தெரிந்திருக்கிறது. எனவே பள்ளி நிர்வாகம் சார்பில் உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சில பள்ளி நிர்வாகங்கள் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருக்கிறது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சேர்ந்து போலீசாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறோம்" என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து துணை முதலமைச்சர் எ.கே.சிவக்குமார் கூறுகையில், "இந்த தகவலை கேள்விப்பட்டு நானும் பீதியடைந்தேன். எனது வீட்டிற்கு எதிரே உள்ள பள்ளி மற்றும் எனக்கு தெரிந்த பல பள்ளிகளுக்கு இதுபோன்று மிரட்டல் வந்திருக்கிறது. விசாரணையில் இது புரளியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. இருப்பினும் நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களின் சோதனையிலும் இதுவரை சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை.
பள்ளி நிர்வாகத்திற்கு [email protected] எனும் ஐடி மூலம் மெயில் வந்திருக்கிறது. அதில், "பள்ளி மைதானத்தில் வெடிக்கும் பொருட்கள் இருக்கின்றன. நவம்பர் 26 அன்று, அல்லாஹ்வின் பாதையில் தியாகிகள் நூற்றுக்கணக்கான உருவ வழிபாட்டாளர்களைக் கொன்றனர். அல்லாஹ்வின் பாதையில் தியாகத்தை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான முஜாஹிதீன்கள் போர் பகுதியை சூழ்ந்தனர். நீங்கள் அல்லாஹ்வின் எதிரிகள், நாங்கள் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் கொன்று விடுவோம்.
உங்களுக்கு இருப்பது இப்போது ஒரேயொரு சான்ஸ்தான், ஒன்று நீங்கள் எங்களின் அடிமைகளாக மாற வேண்டும். அல்லது உண்மையான எங்களின் மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் உண்மையான மார்க்கத்தை இந்தியா முழுவதும் பரப்புவோம்" என நீளமாக எழுதப்பட்டிருக்கிறது. பெங்களூரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கூட ஒரே நேரத்தில் 30 பள்ளிகளுக்கு இதுபோன்ற மிரட்டல் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications